டாஸ்மாக் பேசுதோ.. தூக்கி வெளியே போடுங்க... கொடைக்கானலில் கோபப்பட்ட விஜயகாந்த்
கொடைக்கானல்: கொடைக்கானலில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசவிடாமல் விசிலடித்த தொண்டர்களை வெளியேற்றுமாறு விஜயகாந்த் சொன்னதால் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் லோக்சபா தொகுதி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து, கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார்.
விஜயகாந்த் பேச ஆரம்பிக்கும்போது, மற்ற ஊர்களைப் போல தொண்டர்களைப் பார்த்து கொடியை கீழே இறக்குங்க, மத்தவங்க என் முகத்தைப் பார்க்க வந்துள்ளனர். அவங்களுக்கும் நான் தெரியணும் என்றார்.
டாஸ்மாக் வேலை
தொடர்ந்து பேசத் தொடங்கியதும் மேடை முன் அமர்ந்திருந்த தொண்டர்கள் இருவர் விசிலடித்து கூச்சலிட்டனர். அவர்களைப் பார்த்து சத்தம் போடாதீர்கள் என பொறுமையாக விஜயகாந்த் சொல்லிப் பார்த்தார். அவர்கள் தொடர்ந்து விசிலடித்து சத்தம் போட்டுக் கொண்டிருந்ததால் மீண்டும் கோபப்படாமல் விஜயகாந்த், "அவங்க பேசல, டாஸ்மாக் பேச வைக்கிறது" என்றார்.
தூக்கி வெளியே போடுங்க...
ஒரு கட்டத்தில் டென்ஷனான விஜயகாந்த், அவங்கள தூக்கி வெளியே போடுங்க... என்றதும் அவருடைய தொண்டர் படையினர் கூச்சலிட்ட இருவரையும் வெளியேற்றினர்.
தோல்வி பயம்
தொடர்ந்து பேச ஆரம்பித்த விஜயகாந்த், தருமபுரி பாமக வேட்பாளர் அன்புமணியின் வாகனத்தை ஆளும்கட்சியினர் கற்கள் வீசி தாக்கி உள்ளனர். தோல்வி பயத்தில் அவர்கள் தாக்கத் தொடங்கி விட்டனர். இதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது.
குடிதண்ணீர் இல்லையே
சர்வதேச சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்கு இருவழிச் சாலை போடுறதா சொன்ன அதிமுக குடிக்க தண்ணீர்கூட கொடுக்கவில்லை. ஒரு குடம் 10 ரூபாய்க்கு விற்கிறது. அதிமுக.வும் திமுக.வும் மாறி மாறி மக்களை ஏமாற்றினர். அவர்களை விரட்டத்தான் பாமக, பாஜக, மதிமுக.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளோம்.
ரத்திரியில் ஓட்டு
ராத்திரி ஓட்டு கேட்டா தப்பில்லை என்கிறது தேர்தல் ஆணையம். ராத்திரி ஓட்டா கேட்பாங்க, பணம்தான் கொடுப்பார்கள். பழைய சட்டம் போதும். எதற்காக புதுப்புது சட்டங்கள் கொண்டு வருகிறீர்கள்.
பெண்டு எடுத்துருவேன்
எங்க வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பாலைவனமான திண்டுக்கல்லை பால் வளமாக்குவேன்னு சொல்லி இருக்கிறார். சொன்னதை கண்டிப்பா செய்வார். செய்யா விட்டால் பெண்டு எடுத்துருவேன் என்று சிரித்தபடி கூறினார் விஜயகாந்த்.