2ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அதிரடி கைது
செய்யாறு அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை: செய்யாறு அருகே இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த எரையூர் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் 8 வயது மாணவி ஒருவர் 2ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மதியம் 2 மணியளவில் பள்ளியில் உள்ள கழிவறைக்கு மாணவி சென்றார். அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் குமார் (51) என்பவர் மாணவியை பின்தொடர்ந்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி கதறி அழுதபடியே பள்ளியில் இருந்து வெளியே ஓடிவந்தார்.

இது குறித்து அவரது பெற்றோர்கள் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது அந்த மாணவி, ஆசிரியர் குமார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறினாள். தகவல் அறிந்த அப்பகுதியினர் பள்ளிக்கு திரண்டு வந்தனர். பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் குமாரை பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து குமாரை மீட்டு கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications