நெல்லையில் மாணவர்கள் படிப்பு திறனை ஊக்குவிக்க வீடு தேடி வரும் அரசு பள்ளி ஆசிரியர்கள்!
மாணவர்களின் படிப்பு திறனை ஊக்குவிக்க வீடு தேடி ஆசிரியர்கள் வருவதால் பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லை: நெல்லையில் மாணவர்களின் படிப்பு திறனை ஊக்குவிக்க வீடு தேடி அரசு பள்ளி ஆசிரியர்கள் புறப்பட்டு விட்டதால் புதிய புரட்சி உருவாகியுள்ளது.
அரசு பள்ளிகளில் ஆண்டுக்கு ஆண்டு மாணவர்கள் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இதையடுத்து பெற்றோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் தெருவில் அதிரடியாக இறங்கி விட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் வடகரை, அச்சன்புதூர், காசிதர்மம், கட்டளைகுடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளிலும் மெட்ரிக் பள்ளி மோகம் அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் பெற்றோரின் அறியாமையை பயன்படுத்தி இந்த பள்ளிகள் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. பாளை மாநரகாட்சி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மாது புஷ்பம் தலைமையில் ஆசிரியர்கள் முக்கிய தெருக்களில் புகுந்து பெற்றோரிடம் கல்வியின் அவசியத்தை பற்றி தெரிவித்து அரசு பள்ளியில் வழங்கப்படும் சலுகைகள் பற்றியும் விளக்கி வருகின்றனர்.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு அவர்களது குழந்தைகளுக்கு தேவைப்படும் புத்தக பை, நோட்டுகள், எழுது பொருள்கள், ஆடைகள் கொடுத்து ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் வரும் கல்வி ஆண்டான 2018-19ல் தங்கள் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
மேலும் பின் தங்கிய குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படும் என பெற்றோர்களிடம் அவர்கள் உறுதி அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் மாது புஷ்பம் கூறுகையில், இந்த புதிய முயற்சியால் பெற்றோர் மத்தியில் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பலர் தங்களது குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்க்க முன் வந்துள்ளனர். நாங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற கடுமையாக கல்வி பணியில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications