சசி கோஷ்டியை அலேக்காக வளைக்கும் எடப்பாடி! தளவாய், வேணுகோபாலுக்கு திடீர் முக்கியத்துவம்!!
சென்னை: சசிகலா கோஷ்டியை ஒட்டுமொத்தமாக வளைத்துப் போடும் வேலைகளில் படுமும்முரமாக இருக்கிறது எடப்பாடி கோஷ்டி. இதனால் தளவாய் சுந்தரம் மற்றும் வேணுகோபால் எம்.பி.க்கு திடீர் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சசிகலா அணி, எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என மூன்று துண்டுகளாக சிதறிக் கிடக்கும் அ.தி.மு.கவை, கொங்கு மண்டலத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான வேலைகளில் ஆர்வம் காட்டி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சசிகலா-தினகரன் ஆதரவு நிர்வாகிகளுக்கும் பெரிய அளவில் விலை பேசிவிட்டாராம்.
அதனால்தான் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் பலரும் மௌனம் காக்கின்றனராம். அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் பதவிக்கு வந்ததும், தனக்கு இடது வலதாக தளவாய் சுந்தரத்தையும் உடுமலை ராதாகிருஷ்ணனையும் பக்கத்தில் வைத்துக் கொண்டார்.

நிழல் முதல்வர்
இதன்பிறகு ஆட்சி அதிகாரத்துக்குள் நிழல் முதல்வராகவே வலம் வந்தார் தளவாய். அரசு ஒப்பந்தம், அதிகாரிகள் மாற்றம் என எடப்பாடி பழனிசாமிக்குத் தலைவலியாகவே மாறிப் போனார் தளவாய் சுந்தரம்.

டெல்லி பிரதிநிதி
ஒருகட்டத்தில் டெல்லி பிரதிநிதி பதவிக்குத் தளவாயை சிபாரிசு செய்தார் தினகரன். ஆனால் தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை தொடர்பான விவாதங்களில் தளவாய்சுந்தரத்தை முன்னிறுத்தாமல் ஒதுக்கியே வைத்தது எடப்பாடி பழனிசாமி அணி.

திடீர் முக்கியத்துவம்
இந்நிலையில் திடீரென தேர்தல் ஆணையத்துக்கான அ.தி.மு.க அம்மா அணி குழுவில் தளவாய்சுந்தரம் பெயரை முன்மொழிந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கூடவே, சசிகலாவுக்கு மிகவும் நெருக்கமான வடசென்னை பிரமுகர் வேணுகோபால் எம்.பியையும் நியமித்திருக்கிறார்.

டெல்லிதான் எல்லாமும்
இப்படி திடீரென சசிகலா கோஷ்டியை எடப்பாடி வளைத்துப் போட்டதில் டெல்லியின் வழிகாட்டுதலாம். ஒட்டுமொத்தமாக சசிகலா கோஷ்டியை இழுத்துவிடுங்கள்.... தேர்தலின் போது பார்க்கலாம் என சொல்லியிருக்கிறதாம் டெல்லி. இதனால் எஞ்சிய சசிகலா கோஷ்டியையும் மெல்ல கரைக்கும் வேலைகளில் களமிறங்கியிருக்கிறது எடப்பாடி கோஷ்டி.












Click it and Unblock the Notifications