ஆளுநரையே மிரட்டுகிறாரா சசிகலா.. மைத்ரேயன் ஆவேசம்
சென்னை: ஆளுநரையே மிரட்டும் வகையில் பேசியுள்ளார் சசிகலா. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த எம்.பி மைத்ரேயன் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்குச் சொந்தமான போயஸ் தோட்ட வீட்டில் தங்கியுள்ள சசிகலா இன்று அந்த வீட்டில் கூடிய தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது தனது சுய ரூபத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு வார்த்தையை விட்டு விட்டார். அது, ஓரளவுக்குத்தான் பொறுமையாக இருக்க முடியும். அதன் பிறகு செய்ய வேண்டியதைச் செய்வோம் என்று கூறினார் சசிகலா.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையைத் தூண்டும் வகையில் சசிகலா பேசியுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து அதிமுக எம்.பி. மைத்ரேயன் கூறுகையில், செய்ய வேண்டியதைச் செய்வோம் என்று கூறியுள்ளார் சசிகலா. யாரை மிரட்டுகிறார் அவர். ஆளுநரை மிரட்டுகிறாரா.. ?
இதுகுறித்து குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் தலையிட்டு சசிகலா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார் மைத்ரேயன்.