ஈபிஎஸ் அணியில் ஆடு புலி ஆட்டம் ஆடுகிறாரா தம்பிதுரை.. உற்சாகத்தில் தினகரன் அண்ட் கோ!
அதிமுகவில் சசிகலா, தினகரன் இணைவார்கள் என்ற தம்பிதுரையின் கருத்தால் ஈபிஎஸ் அணி கடும் அதிருப்தியில் இருக்கிறதாம்.
சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றாக இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியிருப்பது தினகரன் அணியை உற்சாகப்படுத்தியுள்ளது. ஆனால் ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்போ தம்பிதுரை மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கிய போது தம்பிதுரை அளித்த பேட்டிகளில் பட்டும்படாமலேயே கருத்து கூறி வந்தார். அதிமுகவில் பிளவே இல்லை; கருத்து வேறுபாடுதான் இருக்கிறது என்பதைத்தான் தேய்ந்து போன ரெக்கார்டாக திரும்ப திரும்ப கூறி வந்தார் தம்பிதுரை.
பின்னர் ஓபிஎஸ் அணி இணைந்தபோதும் கூட இதே பாணியிலான கருத்துகளைத்தான் தம்பிதுரை கூறி வருகிறார். சசிகலா, தினகரன் தரப்பை ஒட்டுமொத்தமாக இணைந்த ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணி அதிமுகவில் இருந்து தூக்கிப் போட்டது.
லாஜிக் இல்லாத பேச்சுகள்
இதன் பின்னரும் தம்பிதுரை, சசிகலா, தினகரன் போன்றவர்கள் மீண்டும் அதிமுகவில் சேருவார்கள் என லாஜிக்கே இல்லாமல் கூறி வந்தார். தினகரனோ, தம்பிதுரையின் கருத்தை வரவேற்கிறேன். நாங்கள்தான் உண்மையான அதிமுக; எங்களோடு வந்து சேருங்கள் என பதில் கூறியிருந்தார்.
மீண்டும் தம்பிதுரை பேட்டி
தம்பிதுரையின் இந்த பேட்டிகளால் ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு கடும் அதிருப்தியில் இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை மீண்டும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இணைவார்கள். அதைத்தான் அதிமுக தொண்டர்கள் விரும்புகிறார்கள். இதற்காக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறேன் என மீண்டும் கூறினார்.
தினகரனுக்கு கண்டனம் தெரிவியுங்க
இதனால் கடும் கோபமடைந்த ஓபிஎஸ் தரப்பு வெளிப்படையாகவே தம்பிதுரையை விமர்சிக்க தொடங்கியது. டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. முனுசாமி, எம்ஜிஆர், ஜெயலலிதாவால் பல பதவிகளில் உட்கார வைக்கப்பட்டவர் தம்பிதுரை. அவரை சமூக குற்றங்கள் செய்த தினகரன் தம்மோடு இணைய அழைத்ததற்கு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் சசிகலா குடும்பத்துடன் நீண்டகாலம் தொடர்பில் இருப்பதால் தம்பிதுரை அப்படி தெரிவிக்கவில்லை என பட்டும் படாமலும் கண்டனம் தெரிவித்தார்.
சந்தேக வளையத்தில் தம்பிதுரை
அதிமுகவில் தம்பிதுரையை ஈபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பு சந்தேகக் கண்ணுடன்தான் பார்த்து வருகிறது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தமது கலக வேலையை தொடர்ந்து செய்வதில்தான் தம்பிதுரை முனைப்பாக இருப்பார் என்றே கூறப்படுகிறது.