சூப்பர் குஷியில் ஓ.பி.எஸ்... ஒரே நாளில் 1 அமைச்சர், 1 மூத்த தலைவர், 4 எம்.பிக்களை அள்ளினார்!
முதல்வர் ஓ.பி.எஸ் அணியில் இன்று ஒரே நாளில் ஒரு அமைச்சர், ஒரு மூத்த தலைவர், 4 எம்.பிக்கள் வந்து சேர்ந்தனர்.
சென்னை: இன்றைய தினம் சசிகலா முகாமுக்குத்தான் சனி தினமாகும். அதேசமயம், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு இது சூப்பர் தினமாக இருந்தது. ஒரே நாளில் ஒரு அமைச்சர், ஒரு மூத்த தலைவர், 4 எம்.பிக்களை அள்ளி விட்டார் ஓ.பி.எஸ்.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முகாம் நாளுக்கு நாள் பிரகாசமடைந்து வருகிறது. பிரமாண்டமாகி வருகிறது. மறுபக்கம் சசிகலா தரப்பு சகிக்க முடியாத அளவுக்கு சங்கடங்களை சந்தித்துக் கொண்டுள்ளது. நெல்லிக்காய் மூட்டை போல சிதறிக் கொண்டிருக்கிறது சசிகலா குரூப்.
இன்றைய நாள் உண்மையிலேயே ஓ.பன்னீர் செல்வம் முகாமுக்கு மிகச் சிறந்த நாள். காரணம் இன்று ஒரே நாளில் பல முக்கிய சம்பவங்களை அந்த அணி சந்தித்தது.
முதலில் இன்று காலை 2 எம்.பிக்கள் வந்து சேர்ந்தனர். நாமக்கல் பி.ஆர். சுந்தரம், கிருஷ்ணகிரி அசோக் குமார் ஆகிய இரு எம்.பிக்கள் வந்து சேர்ந்தனர்.
அடுத்து முக்கிய நிகழ்வாக மாநில அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வந்து சேர்ந்தார். இவர்தான், ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு வந்த முதல், அமைச்சர் ஆவார். அடுத்து மூத்த தலைவரும், எம்.ஜி.ஆர். காலத்தைச் சேர்ந்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் வந்து சேர்ந்தார்.
மாலையில் திருப்பூர் எம்.பி. சத்யபாமா அணியில் வந்து இணைந்தார். இதுவரை மொத்தம் 5 எம்.பிக்கள் ஓ.பி.எஸ் அணியில் இடம் பெற்றுள்ளனர். இரவில் திருவண்ணாமலை எம்.பி. வனரோஜா முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.
மறுபக்கம் சசிகலா அணியில் பல பின்னடைவுகள் இன்று ஏற்பட்டது. கூவத்தூர் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களில் 30 பேர் போர்க் கொடி தூக்கியதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து சசிகலாவே அங்கு விரைந்து போகும் நிலை ஏற்பட்டது. அங்கு வைத்து எம்.எல்.ஏக்களிடம் அவர் தனித் தனியாகப் பேசி சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில் இன்றைய நாள் சசிகலாவுக்கு மிகப் பெரிய சறுக்கலாகவும், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு மிகப் பெரிய குஷியையும் கொடுத்தது.