என்னது பாஜகவில் ஐக்கியமா? ஓபிஎஸ்-க்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா கோஷ்டியில் கடும் எதிர்ப்பு
பாஜகவில் இணையும் முடிவுக்கு ஓபிஎஸ்-க்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா கோஷ்டியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
சென்னை: அதிமுகவை கைப்பற்றுவதை விட்டுவிட்டு பாஜகவில் இணைவது என்பது அரசியல் தற்கொலைக்கு சமம் என அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
டெல்லியில் முகாமிட்டிருந்த ஓபிஎஸ், பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இச்சந்திப்புகளைத் தொடர்ந்து திடீரென பாஜகவில் அப்படியே நாம் இணைவது குறித்து உங்கள் கருத்து என்ன என ரகசிய கருத்து கேட்பு தீவிரமாக நடத்தப்பட்டது.
கடும் அதிர்ச்சி
ஆனால் அந்த அணியின் பெரும்பாலான மூத்த தலைவர்கள், தொண்டர்கள் ஓபிஎஸ்-ன் இந்த முடிவால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிமுகவை கைப்பற்றுவதை விட்டுவிட்டு சொந்த லாபத்துக்காக பாஜகவில் நம்மை இணைய சொல்கிறாரே என்கிற கொந்தளிப்புடன் அவர்கள் இருக்கிறார்களாம்.
சமாதானமாகலாம்
பாஜகவில் சரணடைவதற்கு பதிலாக சசிகலா தரப்புடன் சமாதானமாக போய்விடலாம் என்பதுதான் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி தலைவர்கள், தொண்டர்களின் கருத்தாக உள்ளது. இதனால் அந்த அணியில் ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
உத்தரவாதங்கள்
இருப்பினும் டெல்லியில் தமக்கு தரப்பட்ட உத்தரவாதங்களை விவரித்து பாஜகவில் சரணாகதி அடைந்துவிடலாம் என தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் ஓபிஎஸ். இந்த சமாதானத்தை கேட்கும் மனநிலையில் கூட அவரது சகாக்கள் இல்லையாம்.
தத்தளிக்கும் ஓபிஎஸ்
இதையடுத்து என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி உள்ளாராம் ஓபிஎஸ். இத்தகவலை டெல்லி மேலிடத்துக்கும் பாஸ் செய்துவிட்டு அடுத்த உத்தரவுக்காக காத்திருக்கிறாராம் 'அண்ணன்'.