ஆங்காங்கே மழை பெய்தாலும் மக்களே, அடிக்கிற வெயில் அடிச்சுட்டுத்தான் இருக்கு!
சென்னை: அக்னி வெயிலுக்கு இதமாக ஆங்காங்கே மழை பெய்து வந்தாலும், திருச்சியில் தொடர்ந்து வெயில் 100 டிகிரியைத் தாண்டி கொளுத்தி வருகிறது.
இந்தாண்டு கத்தரி தொடங்குவதற்கு முன்னதாகவே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. திருப்பத்தூரில் அதிகபட்சமாக 110.3 டிகிரி வரை பதிவானது.

இப்போதே இப்படி என்றால், கத்தரியில் என்ன செய்யப் போகிறோம் என்ற பீதியில் இருந்த மக்களுக்கு, கத்தரி தொடங்கியதும் திடீர் கோடை மழை மகிழ்ச்சியைத் தந்து வருகிறது. ஆங்காங்கே தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், மழையால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் வெப்பம் தணிந்துள்ள நிலையில், தொடர்ந்து திருச்சி, வேலூர், சேலம் போன்ற இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி வேலூர், சேலத்தில் 102.2 டிகிரியும், மதுரை, திருச்சியில் 104ம், கன்னியாகுமரியில் 93.2ம் வெயில் பதிவாகியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக தினசரி 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி இருந்தாலும், நேற்று 96.8 டிகிரியாக குறைந்தது. சென்னையில் மழைக்கு வாய்ப்பு இல்லாததால், வருங்காலங்களில் வெயில் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழகம், புதுச்சேரி, லட்சத்தீவு, கடலோர கர்நாடகா, வடக்கு உள் கர்நாடகா உள்ளிட்ட ஓரிரு இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பும் உள்ளதாக வானிலை மைய இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே வழக்கம் போல், இன்றும் காலையிலேயே திருச்சியில் தீயாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டது சூரியன். தற்போதைய நிலவரப்படி அங்கு 103 டிகிரி வெயில் அடித்து வருகிறது.
இதேபோல், சேலம் மற்றும் வேலூரில் முறையே 94 மற்றும் 98 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. சென்னையில் 96 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications