தீயாய்த் தகிக்கும் தமிழகம்.... அக்னி அனலில் சுருளும் மக்கள்.. கொளுத்தும் கோடை!
சென்னை: அக்னிநட்சத்திரம் தொடங்க இன்னும் சிலவாரங்கள் இருக்கும் முன்பாகவே தமிழகத்தில் வெயில் ருத்ரதாண்டவம் ஆடிவருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. நேற்றைய தினம் வெயிலூர் என்று அழைக்கப்படும் வேலூரில் வெப்பம் 107 டிகிரியை தொட்டுள்ளது. திருச்சியில் 105 டிகிரியாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வழக்கமாக ஏப்ரல் மாத இறுதி வாக்கில்தான் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பல நகரங்களில் இப்போதே 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது.

வேலூரில் கொளுத்தும் வெயில்
வேலூரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில்தான் 106.8 டிகிரி வெயில் பதிவானது. ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்திலேயே 107 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. அடிக்கும் அனல்காற்றுக்கு பயந்து மக்கள் வீட்டிலேயே முடங்கினர்.

திருச்சியிலும் அனல்
இதே போல் திருச்சியிலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதிதான் 107 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கடந்த 3ஆம்தேதியே 106.8 டிகிரி வெயில் கொளுத்தியது. நேற்றைய தினம் 105 டிகிரியாக பதிவானது.

மதுரை – சென்னை
தமிழகம் முழுவதிலும் பல மாவட்டங்களில் இதே போன்ற நிலைமைதான் நீடிக்கிறது.மதுரை-103, கரூர், பரமத்தி-102, பாளையங்கோட்டை, தருமபுரி-101, சென்னை மீனம்பாக்கம்-100, கோவை, சேலம்-99, சென்னை நுங்கம்பாக்கம், புதுவையில் 97 டிகிரி வெப்பம் பதிவானது.

அக்னியில் அனல்வீசுமே
ஏப்ரல் தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அக்னி நட்சத்திர காலமான மே மாதங்களில் எப்படி சமாளிக்க போகிறோம் என்ற பொதுமக்கள் தவிக்கிறார்கள். இரவில் காற்றும் குறைந்து புழுக்கம் அதிகரித்து விட்டதால் மக்களின் தூக்கமும் தொலைந்து போயுள்ளது.

கோடை மழை
இதனிடையே காற்று மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது.
திருச்செங்கோட்டில் 60 மி.மீ. மழை பெய்துள்ளது. இதேபோல் திருப்பூர், பொள்ளாச்சி, பவானி, வால்பாறை, ஏற்காடு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி பகுதியிலும் மிதமான மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications