கையில் துப்பாக்கியோடு அருள் பாலிக்கும் பிரபாகரன் சாமி!
வேளாங்கண்ணி: கையில் அரிவாளுடன் காவல் தெய்வம் கருப்பசாமிக்கு கோயில் கட்டி பார்த்திருப்போம். நாகை மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு கோவில் கட்டியுள்ளார் திமுக நிர்வாகி ஒருவர்.
இந்த கோவில்தான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகமும் நடத்தியுள்ளார். இந்த படம் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேளாங்கண்ணி அருகே உள்ளது தெற்கு பொய்கை நல்லூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். தி.மு.க. நிர்வாகியான இவர், தனது கிராமத்தில் பெரியாச்சி அம்மன் கோயில் ஒன்றை கட்டியுள்ளார்.
இந்த கோயிலில் இடது மற்றும் வலதுப் பக்கத்தில் இரண்டு குதிரைகளை வைத்துள்ளார். இந்த குதிரைகளுக்கு அருகில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் முழு உருவ சிலையை வைத்துள்ளார் மாணிக்கம். கையில் துப்பாக்கி ஏந்திய நிலையில் கம்பீரமாக நிற்கிறார் பிரபாகரன்.
இந்த கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளை நடத்தியுள்ளார் மாணிக்கம். ஏராளமானோர் வந்து வழிபட்டனர்.
தமிழகத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஆதரவாளர்களும், ரசிகர்களும் ஏராளமானோர் இருக்கின்றனர். ஆனால் திமுக நிர்வாகி ஒருவர் கோயில் கட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.