மன்மத வருட புத்தாண்டு... உற்சாக வரவேற்பு: ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
மன்மத வருட தமிழ் புத்தாண்டு தினத்தை தமிழக மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே வரிசையில் நின்று இறைவனை வழிபட்டனர்.
சென்னையில் வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட ஆலயங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதிகாலை முதலே புத்தாடை அணிந்த மக்கள் இறைவனை வழிபட்டு புத்தாண்டு நலமாக அமைய வேண்டிக்கொண்டனர்.

மன்மத வருடம்
சூரியன் மேஷம் ராசியில் நுழைவதை தமிழ் வருடப் பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இராசி மண்டல வலயத்தில் உள்ள மேஷ ராசியில் சூரியன் உதயமாகும் தினமே தமிழ் புது வருடப்பிறப்பாக கொண்டாடப்பெறுகின்றது. சூரிய பகவான் மீண்டும் மேஷ ராசிக்கு வரும் வரை உள்ள காலம் ஓர் தமிழ்-வருஷமாகும். மன்மத வருடம் தமிழ் வருடங்களான 60 வருடங்களில் 29வது ஆண்டாக வருவது ஆகும். கலி பிறந்து 5116வது வருடமாகும்.

சித்திரை புதுவருடம்
சித்திரை மாத முதல் நாளை இந்து சமயத்தைப் பின்பற்றும் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். இலங்கையில் தமிழ்- சிங்கள மக்களால் கொண்டாடப்படும் வைபவமாக புதுவருடப் பிறப்பு இருப்பதால் இது ஒரு தேசியப் பெருவிழாவாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது.

ஆலய தரிசனம்
புதுவருட தினத்தன்று புத்தாடை தரித்து ஆலயம் சென்று வழிபடுவதோடு. குறிக்கப்பெற்ற சுபநேரத்தில் பெரியோர்களை வணங்கி அவர்களின் ஆசீர்வாதம் பெறுவதும், கைவிசேஷம் பெறுவதும் தொன்று தொட்டுவரும் வழக்கமாக உள்ளது.
வருடப் பிறப்பன்று நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அந்த வருடம் முழுவதும் எமது வாழ்க்கையை வளப்படுத்தும் என்பது இந்துக்களின் ஐதீகம்.

கனி காணுதல்
சித்திரை பிறப்பதற்கு முந்தைய நாள் இரவே பூஜை அறையில் வீட்டிலுள்ள பொன், வெள்ளி நகைகள், உட்பட அனைத்து ஆபரணங்களையும் பணம், நிலைக்கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பழங்கள், தேங்காய், மலர்கள் முதலிய மங்கலப் பொருள்களையும் தயாரித்து, ஒரு மனையின் மீது இட்டு அதற்கு அழகியகோலமிட்டு, பூஜைக்குரிய தெய்வத்தின் வைத்துவிடுவர்.
அரிசி, பருப்பு, வெல்லம், பலா, மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றையும் வைத்து சித்திரை மாதப்பிறப்பன்று அதிகாலையில் முதன் முதலாக வீட்டில் மூத்த பெண்மணி எழுந்து குளித்து புத்தாடை உடுத்தி இறைவன் முன்பு குத்துவிளக்குகளையும், ஊதுவத்திகளையும் ஏற்றி வைப்பார்.

தெய்வீக தரிசனம்
இதனையடுத்து தூங்கும் ஒவ்வொருவரையும் எழுப்பி, கண்களை மூடிய நிலையிலேயே சுவாமியின் முன்பு அழைத்துச் சென்று, கண்களை திறக்கச் சொல்லி பூஜைக்குரிய தெய்வத்தையும், பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக தரிசிக்கும்படி செய்தனர். இதன் மூலம் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் எனவும் மங்கலப் பொருள்கள் செழித்து இருக்கும் என்பது நம்பிக்கை.

தங்க கவச அலங்காரத்தில்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், இன்று அதிகாலை 5:00 முதல் 6:00 மணி வரை, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தங்க கவச அலங்காரத்தில் வடபழனியாண்டவர் அருள்பாலித்தார். இதனை ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

அறுசுவை உணவு
சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பதால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பது வழக்கமாகும்.

வேப்பம்பூ பச்சடி
மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம்பெறுதல் அவசியம். வேப்பம் பூ கசக்கும் என்றாலும் மனித உடலிலுள்ள ரத்தத்தை தூய்மை செய்வதில் வேப்பம் பூவுக்கு நிகராக வேறு எந்த மூலிகையும் இல்லை. இதற்காகவே இந்த உணவு உண்ணப்படுகிறது.

பஞ்சாங்கம் படித்தல்
சித்திரை புதுவருடமன்று நம் வருங்கால பலன்களை அறிவது அவசியம். புத்தாண்டு பஞ்சாங்கம் வாங்கி அதற்கு சந்தனம், குங்குமம் ஆகியன இட்டு, பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும். பின்னர் குடும்ப சோதிடரையோ, புரோகிதரையோ கொண்டு புத்தாண்டுப் பூஜைகளை செய்யவேண்டும். பூஜை முடிந்த பின்பு அவர் புத்தாண்டுப் பஞ்சாங்கத்தைப் படிப்பார். அதன் மூலம் அந்த ஆண்டில், நவக்கிரக சஞ்சாரத்தினால் உலகத்துக்கும், மக்களுக்கும் நிகழவிருக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications