வழக்கறிஞர் சட்டத் திருத்தம் தாற்காலிகமாக நிறுத்தி வைப்பு: சென்னை ஹைகோர்ட்
சென்னை: புதிய சட்டத்திருத்தத்தின் கீழ் வழக்கறிஞர்கள் மீதான சட்டத் திருத்தம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வழக்கறிஞர்கள், போராட்டத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்களை தடை செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி புதிய சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டது.
இந்த புதிய சட்டத்திருத்தத்திற்கு வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், வழக்கறிஞர் சட்டத் திருத்தம் உடனடியாக அமல்படுத்தப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக நீதிபதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து நீதிபதிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள 25 நீதிபதிகள் கலந்து கொண்டு வழக்கறிஞர்கள் சட்ட திருத்தம் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் 3 நீதிபதிகள் இருந்த விதிக்குழு மாற்றி அமைக்கப்பட்டு, புதிதாக நீதிபதிகள் நாகமுத்து, எம்.எம் சுந்தரேஷ், மணிகுமார், பி.என்.பிரகாஷ், ராஜூவ் சக்தேர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த குழுவிடம் வழக்கறிஞர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும், விதிக் குழுவானது, சட்ட திருத்ததின் மீது முடிவெடுக்கும் வரை வழக்கறிஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது பழைய விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.