சரத்குமார் எம்.எல்.ஏவுக்காக தேதி மாறிய தென்காசி ரயில்வே மேம்பால திறப்பு விழா
தென்காசி: தென்காசி ரயில்வே மேம்பால திறப்புவிழா திடீரென தேதி மாற்றப்பட்டதால் வர்த்தகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தென்காசியில் ரயில் வரும் நேரத்தில் கேட் மூடப்படுவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. ரயில்வே கேட்டை கடந்து தான் மருத்துவமனை உள்ளது. அவசர காலங்களில் கேட் அடைக்கப்பட்டிருந்தால் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் நிலைமை மோசமாகிவிடும்.

மேலும் பள்ளி, பேருந்து நிலையமும் இதை தாண்டி தான் உள்ளது. இதை கருத்தில் கொண்டு ரயில்வே மேம்பாலம் கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக கட்டப்பட்டு முடிந்த நிலையில் திறப்புக்காக காத்திருக்கிறது. ஆனால் திறப்பு விழா நடத்தாமல் பொதுப்பணித்துறையினர் காலம் கடத்தினர்.
இதை கண்டித்து தென்காசி வர்த்தக சங்கத்தினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்பட பல தரப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். எதற்கும் பொது பணித்துறையினர் அசைத்து கொடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 6ம் தேதி வர்த்தக சங்கத்தினர் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 5ம் தேதி மாலை பொதுப்பணி துறையினர் ரயில்வே மேம்பாலம் நவம்பர் 8ம் தேதி திறக்கப்படும் என்று திடீரென அறிவித்தனர். இதனால் 6ம் தேதி நடைபெறுவதாக இருந்த கடையடைப்பை போராட்டத்தை வர்த்தக சங்கம் ரத்து செய்தது.
இந்த அறிவிப்பு வெளியான போது இது உண்மையா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு இருந்தது. காரணம் பொதுப்பணித்துறை தானாக இதை திறக்க முடியாது. மேலிடத்தில் கூறி முறையான உத்தரவு வர வேண்டும். பின்னர் இதை திறந்து வைப்பது யார் என்று விபரங்கள் எதுவும் இல்லாமல் எப்படி திறந்து வைப்பார்கள் என்று தெரியவில்லை.
இந்நிலையில் 7ந் தேதி மதியம் திறப்பு விழா ரத்தானதாக தகவல் வெளியானதால் பொது மக்கள், வர்த்தகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

திறப்பு விழா நவம்பர் 11ம் தேதிக்கு மாற்றிவைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் சரத்குமாரின் தாயார் மறைந்து விட்டதால் அவர் இல்லாமல் பாலத்தை திறக்க முடியாது என்பதுதான்.
நவம்பர் 10ம் தேதி சரத்குமாரின் தாயாருக்கு மறைவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அது முடிந்த பின் முதல்வர் சென்னையில் வீடியோ கான்பிராசன்ஸ் மூலம் திறப்பார் என்றும், தென்காசியில் சரத்குமார் திறப்பு விழாவில் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.
எனவே வரும் 11ம் தேதி திறக்கப்படும் என்றும் தகவல் கூறுகின்றன. இந்நிலையில் கடந்த 6ந் தேதி முதல் பாலத்தை அதிகாரிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications