Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இடிந்தகரையில் சராமரி நாட்டு வெடி குண்டுகள் வீச்சால் பதற்றம்! உதயகுமார் சதி என குற்றச்சாட்டு!!

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின்நிலையம் அருகே இடிந்தகரையில் நாட்டு வெடி குண்டுகள் சராமரியாக வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவீச்சு சம்பவமானது அணு உலைக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கும் சதி நடவடிக்கைதான் என்று போராட்டக் குழுவின் உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அருகே உள்ள கடற்கரை கிராமம் இடிந்தகரை. அணுஉலைக்கு எதிரான போராட்ட குழுவினர் இங்குள்ள தேவாலயத்தில் முகாமிட்டு, போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

லோக்சபா தேர்தலில் இடிந்தகரை உள்ளிட்ட கடற்கரை கிராம மக்கள், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தனர். ஆனால், அணு உலை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காதவர்கள், தாங்கள் விரும்பிய அரசியல்கட்சிகளை ஆதரித்தனர்.

இடிந்தகரையை சேர்ந்த சகாயகபூர், லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றதை பட்டாசு வெடித்து கொண்டாடினார். இதை அணுஉலை எதிர்ப்பாளர்கள் எதிர்த்தனர்.

அவரை ஊரைவிட்டு வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன. இந்நிலையில் நேற்று இரவு 10:15 மணியவில் இடிந்தகரை பேருந்து நிலையம் அருகே அடுத்தடுத்து 5 குண்டுகள் வெடித்தன. இதில் ஒரு கார், 3 வீடுகள் சேதமடைந்தனர். வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

போராட்டத்தை முறியடிக்க சதி- உதயகுமார்

இந்த சம்பவம் குறித்து அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளதாவது:

இரவு 10:15 மணியளவில் இடிந்தகரையில் சில சமூக விரோதிகள் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். மொத்தம் ஐந்து குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. கலவரமடைந்த பொதுமக்கள் போராட்டப் பந்தலில் குழுமினர். யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

கூடங்குளம் காவல் நிலைய அதிகாரிகள் உள்ளூர் பத்திரிக்கையாளர்களை தொடர்புகொண்டு இடிந்தகரையில் இரண்டு தரப்புக்கள் மோதிக் கொள்கின்றன என்ற தவறான, உண்மைக்குப் புறம்பான தகவலை பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக அப்பகுதி மக்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அறவழியில் நடத்திவரும் இடிந்தகரைப் போராட்டத்தை முறியடிக்கவும், முழுமையாக அழித்தொழிக்கவும், இடிந்தகரை ஊரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், தமிழக அரசு, அதன் காவல் துறை, அணுமின் நிர்வாகம் போன்றோர் கூட்டாகச் சேர்ந்து சமூக விரோதிகள் சிலரை துணைக்கு அழைத்துக் கொண்டு இந்த சதித் திட்டத்தை அரங்கேற்றுகின்றனர்.

அணுமின் நிலைய துணை ஒப்பந்தக்காரர் ஒருவரும் மற்றும் அவரது சகோதரர்களும், மே 20 அன்று ஊருக்குள் பிரச்சினை செய்ததால், ஊர்க்கூட்டம் நடத்தி ஊர் மக்கள் அழைத்து விசாரித்திருக்கின்றனர். ஆனால் மேற்படி நபர்கள் கூடங்குளம் காவல் நிலையம் சென்று ஊருக்கு எதிராக புகார் செய்திருக்கின்றனர்.

பின்னர் இரவு நாட்டு வெடி குண்டுகளுடன் ஊருக்குள் சுற்றித் திரிந்து, கலவரம் செய்ய முனைந்திருக்கின்றனர். இந்நிலையில் இடிந்தகரை மக்கள் மீண்டும் ஊர்க்கூட்டம் நடத்தி வன்முறையைத் தூண்டும் நபர்களை என்ன செய்வது என்று பேசினார்கள். பின்னர் மதியம் இடிந்தகரை பெண்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மற்றும் வள்ளியூர் டி.எஸ்.பி. ஆகியோரை சந்தித்து இந்தப்பிரச்சினை குறித்து மனு ஒன்றையும் அளித்தனர்.

ஆனாலும் சமூக விரோதிகளும், விஜயாபதி பஞ்சாயத்துத் தலைவர் உறவினர்கள் சிலரும் குண்டுகள் வீசி கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு ஆதரவாகப் பேசியும் செயல்பட்டும் வருகிறது தமிழக காவல் துறை.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்ட உடனேயே, ஆயிரம் நாட்கள் கடந்து நடக்கும் மக்கள் போராட்டத்தை எப்படியாவது முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசு திட்டமிடுகிறது. இவர்கள் கூடங்குளம் அணுமின் நிர்வாகத்தோடு கைகோர்த்து, அறவழியில் போராடும் அப்பாவி மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடுகிறார்கள்.

போராட்டத்தை நிறுத்த விழைந்தால், அந்த மக்களை அழைத்துப் பேசுவதுதான் முறையே தவிர, பாசிசத் தன்மையோடு செயல்படுவதல்ல. தமிழக அரசும், காவல் துறையும், அணுமின் நிர்வாகமும் மக்கள் விரோத பாசிச சதிகளை உடனே நிறுத்த வேண்டும். மக்களுக்கு நேரும் துன்பங்களுக்கு, இழப்புக்களுக்கு தமிழக அரசு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

தமிழக மக்கள், ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள் இடிந்தகரையின் மீதும், போராடும் மக்கள் மீதும் ஒரு கண் வைத்துக் கொள்ளுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு உதயகுமார் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+