இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம்- டெசோ கோரிக்கை
சென்னை: இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து ஆலோசனை நடந்த திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று டெசோ கூட்டம் நடந்தது.
இலங்கையில் நடந்து வரும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று டெசோ அமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியாவில் இருந்து ஒரு துரும்பு கூட செல்லக் கூடாது என்று டெசோ அமைப்பின் தலைவரும் திமுக தலைவருமான கருணாநிதி தெரிவித்தார்.

இந்நிலையில் காமன்வெல்த் மாநாட்டில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொண்டார். இதையடுத்து கருணாநிதியை சந்தித்த செய்தியாளர்கள் சல்மான் குர்ஷித் இலங்கை சென்றது குறித்து கேட்டதற்கு, இந்த விவகாரத்தில் டெசோ அமைப்பு கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யும் என்றார்.
அதன்படி கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று டெசோ அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், திக தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஈழத் தமிழர் பிரச்சனையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது பற்றியும், ஈழத் தமிழர்களின் நலனை காக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த விவரம்,
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி, டெசோ அமைப்பு, தமிழகத்தின் அனைத்து கட்சிகள் ஆகியவை மத்திய அரசை பலமுறை வலியுறுத்தியும் தமிழர்களின் உணர்வுகளை புறக்கணித்து விட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் ஒரு குழு இலங்கை சென்றது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல் உள்ளது.
ராஜபக்சேவுக்கு இங்கிலாந்து பிரதமர் கேமரூனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டது தமிழ் இனத்தை அழிக்க முயலும் ராஜபக்சேவுக்கு தோள் கொடுத்து தூக்கி நிறுத்தும் நடவடிக்கை என்று டெசோ கருதுகிறது. இனியாவது மத்திய அரசு இலங்கை மனித உரிமை மீறல் போர்க் குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அரசுகளுக்கு அனைத்து அதிகாரமும் கிடைக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்த தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications