தாலி அகற்ற தடை.. கீ. வீரமணி வீட்டுமுன் பட்டாசுடன் வந்த இந்து அமைப்பினர் கைது
சென்னை: தாலி அகற்றும் போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் திராவிடர் கழகத்தலைவர் கீ. வீரமணி வீட்டின் முன்பு பட்டாசுடன் திரண்ட 30க்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்த திராவிடர் கழகத்தினருக்கு வழங்கிய அனுமதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதுபற்றி அறிந்ததும் இந்து மகாசபை தென்சென்னை மாவட்ட தலைவர் வெங்கட், இளைஞரணி செயலாளர் சுரேஷ் உள்பட 30க்கும் மேற்பட்டோர் அடையாறில் உள்ள கி.வீரமணி வீட்டு முன்பு பட்டாசு - இனிப்புடன் திரண்டனர். அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது போலீசாருக்கும், இந்து மகாசபை அமைப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் - தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 30 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

கோவையில் மஞ்சள்கயிறு

திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தாலிக்கயிறு அகற்றும் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் பாரத் அனுமன் சேனா கட்சி சார்பில் பெண்களுக்கு மஞ்சள் தாலிக்கயிறு, வளையல், குங்குமம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை பெண்களுக்கு மஞ்சள் தாலிக்கயிறு வழங்கினர்.













Click it and Unblock the Notifications