சசிகலாவை நீக்க என்ன வழின்னு ஓபிஎஸ் தான் சொல்லனும்.. தம்பிதுரை பேட்டி!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக உள்ள சசிகலாவை நீக்க என்ன வழி என்பதை ஓ.பன்னீர்செல்வம் தான் சொல்ல வேண்டும் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக கபளீகரம் செய்து கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைத்தது சசிகலா கோஷ்டி. இதற்கான முதல்படியாக தம்மை பொதுச்செயலாளராக பதவியேற்றார் சசிகலா. பின்னர் முதல்வராகவும் ஆசைப்பட்டார் சசிகலா. ஆனால் கிடைத்தது சிறைவாசம்.

அதேபோன்று சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்ட டிடிவி தினகரனும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் மூலமாக முதல்வராகிவிடலாம் என கணக்குப் போட்டார். ஆனால் தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அவரும் திஹார் சிறைக்கு சென்று விட்டார்.
இதனிடையே பிளவுபட்டுள்ள இரு அணிகளையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இரு அணிகள் சார்பில் தலா 7 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் பேச்சுவார்த்தை தான் இன்னும் தொடங்கப்படாமல் இழுபறியிலே உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயயலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்ற இரண்டு நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இணைப்பு பற்றி பேச முடியும் என ஓபிஎஸ் தரப்பினர் உறுதியாக தெரிவித்துள்ளன.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, பொதுக்குழு கூடி சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டவர் என்று கூறினார். மேலும் சசிகலாவை தனிப்பட்ட முறையில் யாரும் நீக்க முடியாது எனக் கூறிய தம்பிதுரை, சசிகலா நியமன விவகாரத்திற்கு, இரு அணியினரும் பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காண முடியும், சசிகலாவை நீக்க என்ன வழி என்பதை ஓபிஎஸ் சொல்லட்டும் என்றார்.












Click it and Unblock the Notifications