கூவத்தூர் ரிசார்ட்டுக்கு விரைந்த தம்பித்துரை.. எம்.எல்.ஏக்களுடன் அவசர ஆலோசனை
கூவத்தூரில் தங்கியுள்ள எம்எல்ஏக்களை சந்திக்க லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ரிசார்ட்டுக்கு சென்றுள்ளார்.
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆளுநரை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்ட பின்னர் லோக் சபா துணை சபா நாயகர் தம்பிதுரை எம்எல்ஏக்களை சந்தித்து அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
கூவத்தூரில் 9 நாட்களாக அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார் என்று எதிர்ப்பார்த்து அவர்கள் காத்திருந்த நிலையில், இன்று சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூவத்தூரில் உள்ள எம்எல்ஏக்களை சந்தித்து பேச வருகை தந்துள்ளார். இன்று ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்துவிட்டால் சட்டசபையில் பெரும்பான்மையை எடப்பாடி பழனிச்சாமி நிருப்பிக்க வேண்டும். மேலும், ஓபிஎஸ் ஆதரவு நிலையை யாரும் எடுத்துவிடக் கூடாது என்பது குறித்தெல்லாம் எம்எல்ஏக்களிடம் தம்பிதுரை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி மகிழ்ச்சிகரமான செய்தியை கொண்டு வருவார் என்றும் எம்எல்ஏக்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். 9 நாள் சிறைவாசத்திற்கு இன்றாவது ஒரு முடிவு கிடைக்குமா என்று எதிர்ப்பார்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications