45 ஆண்டுகால இரட்டை இலையே சுயேச்சை வென்றுவிட்டதே... தங்க தமிழ் செல்வன் பேச்சு
45 ஆண்டுகால இரட்டை இலையையே சுயேச்சை வென்றது என்று மிகவும் தெனாவட்டாக பேசினார் தங்க தமிழ் செல்வன்.
சென்னை: ஆர்கே நகரில் தினகரன் முன்னிலை வகித்து வருவது குறித்து மகிழ்ச்சி பொங்கிய தங்கதமிழ்செல்வன் பாரம்பரியமான இரட்டை இலை சின்னத்தை ஒரு சுயேச்சை வென்று விட்டது என்று பேசினார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தங்கதமிழ் செல்வன். இவர் தினகரனின் தீவிர ஆதரவாளராவார்.
தினகரனை முதல்வர் அணியினர் ஒதுக்கி வைத்துவிட்டதால் அவருடன் தனித்து 18 எம்எல்ஏக்கள் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் முதல்வர் மீது நம்பிக்கை என்று 18 எம்எல்ஏக்களும் மனு கொடுத்தனர்.
இதையடுத்து கொறடா உத்தரவை மீறியதாக 18 பேரையும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். எனினும் அவர்கள் 18 பேரும் தினகரன் ஆதரவாளர்களாகவே வலம் வருகின்றனர். ஆர்கே நகரில் தினகரனை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.
இதற்கு பலனாக தினகரன் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதுகுறித்து அவரது ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கூறுகையில், சுயேச்சை வேட்பாளர் ஜெயித்து சாதனை படைத்து விட்டார்.
பல ஆண்டுகளாக பழமை வாய்ந்த திமுகவையும், 45 ஆண்டுகால பழமைவாய்ந்த அதிமுகவையும், அதிலும் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இரட்டை இலையை ஒரு சுயேச்சை வேட்பாளர் இன்று தோற்கடித்து மாபெரும் சாதனை படைத்துவிட்டார் என்றார்.