ஒன்இந்தியா வாசகர்களே உங்களுக்கு மனமார்ந்த நன்றி.. நெகிழ்ச்சியுடன் கூறும் தந்தை, மகள்!
திருச்சி: மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோமாவில் இருந்த சிறுமி சாருப்ரியா ஒன்இந்தியா வாசகர்கள் செய்த நிதியுதவி மற்றும் பிரார்த்தனையால் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
திருச்சியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான கணேச மூர்த்தி என்பவரின் மகள் சாருப்ரியா (13). ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சென்று வந்த சிறுமிக்கு கடந்த மாதம் துவக்கத்தில் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர்.
கோமாவுக்கு சென்றுவிட்ட சிறுமிக்கு அடிக்கடி ஃபிட்ஸ் வந்ததால் சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறினர். இந்நிலையில் வறுமையில் உள்ள கணேச மூர்த்தியால் மருத்துவ செலவை சமாளிக்க முடியவில்லை.
பணக் கஷ்டத்தால் சிகிச்சையை தொடர முடியாத நிலைக்கு கணேச மூர்த்தி தள்ளப்பட்டார். மகளை காப்பாற்ற வேண்டும் ஆனால் பணம் இல்லாமல் சிகிச்சையை நிறுத்த வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோமே என கண்ணீர் சிந்திய கணேச மூர்த்திக்கு ஒன்இந்தியா வாசகர்கள் கை கொடுத்தனர்.
சாருப்ரியாவின் நிலை குறித்து நம் இணையதளத்தில் வெளியான செய்தியை பார்த்துவிட்டு ஏராளமான வாசகர்கள் கணேச மூர்த்தியை தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் கூறியதுடன் போதிய நிதியுதவி செய்து சிகிச்சையை தொடர உதவினர்.
வாசகர்களின் தாராள மனதால் சாருப்ரியா சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். ஒரு மாதத்திற்கும் மேலாக ஐசியு பிரிவில் இருந்ததால் சிறுமி சோர்வாக உள்ளார். வீட்டிற்கு வந்ததும் சிறுமியும், அவரது தந்தையும் வாசகர்களாகிய உங்களுக்கு நன்றி கூறும் வகையில் வீடியோ ஒன்றை எடுத்து எங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திக்கற்று நின்றபோது உதவிய ஒன்இந்தியா வாசகர்களை உயிருள்ள வரை மறக்க மாட்டோம் என கணேச மூர்த்தி கண்ணீர் மல்க நம்மிடம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications