அப்பல்லோ டாக்டர்கள் பிரஸ் மீட்டில் உள் நோக்கம் உள்ளது: தீபா பரபரப்பு பேட்டி
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அப்பல்லோ டாக்டர்கள் பிரஸ் மீட் செய்யப்பட்டுள்ளது ஆய்வு செய்யப்பட வேண்டியது. முன்னெச்சரிக்கையாக இந்த பிரஸ்மீட்டை நடத்த செய்துள்ளனர் என்று தீபா தெரிவித்தார்.
சென்னை: ஜெயலலிதா சிகிச்சை குறித்து அப்பல்லோ டாக்டர்கள் அளித்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்தார்.
அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சையில் மர்மம் இல்லை என்று, அம்மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கிய டாக்டர்கள் நேற்று பேட்டியளித்தனர்.
இதுகுறித்து தீபாவிடம் நிருபர்கள் இன்று கேட்டபோது அவர் கூறியது: டாக்டர்கள் பிரஸ் மீட்டில், அனைத்து விளக்கமும் தரப்படவில்லை. விளக்கம் என்ற பெயரில் இரு வரிகளை சொல்லியுள்ளார்கள். எதற்காக மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார், என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டன, யாருடைய அனுமதியின்பேரில் சிகிச்சை நடைபெற்றது என்பதை தெரிவிக்கவில்லை.
இந்த பிரஸ்மீட்டை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பிரஸ் மீட் செய்யப்பட்டுள்ளது ஆய்வு செய்யப்பட வேண்டியது. சசிகலா முதல்வராக பதவியேற்க திட்டமிட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக இந்த பிரஸ்மீட்டை நடத்த செய்துள்ளனர். நான் ஆரம்பத்திலேயே விளக்கம் கேட்டு வந்தேன். திடீரென விளக்கம் கேட்கவில்லை. என்ன சிகிச்சை, ஏன் என்பது மட்டுமே எனது கேள்வி.
ஜெயலலிதா சிகிச்சை செலவீன பில்களை குடும்பத்தாருக்கு அளித்ததாக கூறியுள்ளனர். அந்த குடும்பத்தார் யார் என்பதே எனது கேள்வி. ஏனெனில் ஜெயலலிதா குடும்பத்தை சேர்ந்த என்னை டாக்டர்கள் தொடர்புகொள்ளவில்லை. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது என்னை சந்திக்கவும் மருத்துவமனை அனுமதிக்கவில்லை. இவ்வாறு தீபா தெரிவித்தார்.