மிராசுதாராக பிறந்து பெரம்பலூர் எம்.பி வேட்பாளரான மருதராஜா
பெரம்பலூர்: நாடாளுமன்ற தேர்தலில்பெரம்பலூர் லோக்சபா போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.பி. மருதைராஜ் என்கிற ஆர்.பி. மருதராஜா (வயது50), பெரம்பலூர் அருகே உள்ள ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர்.
7.3.1963-ல் பிறந்த ஆர்.பி. மருதராஜாவின் பெற்றோர் எஸ்.பெரியசாமி கமலம். மிராசுதாரான பெரியசாமி மரணமடைந்துவிட்டார்.
ஆர்.பி. மருதராஜா ரங்கநாதபுரம், பாளையம், குரும்பலூர் பகுதிகளில் தொடக்கக்கல்வியும், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைக்கல்வியும் பயின்று திருச்சி தேசியக்கல்லூரியில் 1981-1986 வரை எம்.எஸ்.சி. (அப்ளைடு ஜியாலஜி) பட்ட மேற்படிப்பு படித்துள்ளார். இவர் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர். 30 ஆண்டுகாலமாக அதிமுகவிலேயே இருக்கிறார்.
ஆர்.பி. மருதராஜாவின் மனைவி ம.கலைச்செல்வி. பி.எஸ்.சி. பட்டதாரி. இவர்களுக்கு பிரசன்னகுமார் (11-ஆம் வகுப்பு) என்ற மகனும், சுவாதிபிரியா (10ஆம் வகுப்பு) மகளும் உள்ளனர்.
மாணவப்பருவத்தில்....
1980-ஆம் ஆண்டில் மாணவப்பருவத்திலேயே அ.தி.மு.க.வில் இணைந்த மருதராஜா, 1986 முதல் 1994 வரை பெரம்பலூர் ஒன்றிய மாணவர் அணி செயலாளராகவும், 1994 முதல் 2006 வரை பெரம்பலூர் ஒன்றிய அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் ஆகவும் பதவி வகித்துள்ளார்.
ஒன்றியக் கவுன்சிலர்
2004 முதல் பெரம்பலூர் ஒன்றிய கழக செயலாளராக பொறுப்பில் உள்ள மருதராஜா, 2011-ல் நடந்த உள்ளாட்சி மன்றத்தேர்தலில் ஒன்றிய கவுன்சிலராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பெரம்பலூர் ஒன்றியக்குழுத்தலைவராக பதவிவகித்துவருகிறார்.
விவசாயக்குடும்பம்
விவசாயத்தில் ஈடுபட்டுவந்தாலும், முழுநேரமும் கட்சிப்பணிக்காக தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். கட்சித்தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி காட்டும் திறமைபெற்றவர் என்ற பெயர் அதிமுகவினரிடையே உள்ளது.
பெரம்பலூர் கல்யாண் நகரில் குடும்பத்துடன் வசித்துவரும் ஆர்.பி. மருதராஜா, கட்சியின் சக தொண்டர்களுடன் அன்பாக பழகக்கூடியவர் என்ற நற்பெயரும் உள்ளது. இதனால் வெற்றி வாய்ப்பும் அதிகம் என்கின்றனர் அதிமுகவினர்.