மாணவிகள் உயிரிழந்த வழக்கு: கல்லூரி தாளாளர் வாசுகி உள்பட 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
விழுப்புரம்: இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூவர் உயிரிழந்த வழக்கில், கல்லூரி தாளாளர் வாசுகி உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து விழுப்புரம் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள பங்காரம் எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழந்த வழக்கில் கைதான கல்லூரி தாளாளர் வாசுகி, மகன் சுவாகர் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி, ஊழியர் வெங்கடேசன் 4 பேரும், சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்குப் பிறகு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் 4 பேரையும் ஜாமீனில் விடுவிக்கக் கோரி, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சரோஜினிதேவி முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. வாசுகித் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி, சிறையிலுள்ள 4 பேரையும் ஜாமீனில் விடுவிக்கக் கோரினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர் பொன்.சிவா, உயிரிழந்த மாணவிகள், கல்லூரி நிர்வாகத்தின் மீது புகார் தெரிவித்தும் கல்விக் கட்டண நெருக்கடி, அச்சுறுத்தல் இருந்ததாகவும் கடிதம் எழுதி வைத்துள்ளனர். அவர்களது பெற்றோர்களையும் மிரட்டியுள்ளதாக புகார் வந்துள்ளது.
மேலும், இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை பாதிக்காமல் நடைபெற 4 பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என்றார். இதை விசாரித்த நீதிபதி, 4 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனிடையே உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இந்த விசாரணையின்போது, சிபிசிஐடி அதிகாரிகளான ஏடிஜிபி கரன் சின்ஹா, ஐஜி மகேஷ் குமார் அகர்வால், எஸ்பி நாகஜோதி, ஏடிஎஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழக பதிவாளர் ஆகியோரும் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இறந்த மாணவி பிரியங்காவின் தாய் ஜெயந்தி, சகோதரி ஆகியோரிடமும் ரேகா ஷர்மா விசாரணை நடத்தினார். மற்ற மாணவிகள் சரண்யா மற்றும் மோனிஷாவின் பெற்றோர் நேற்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் ரேகா ஷர்மா முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்












Click it and Unblock the Notifications