நெல்லை அரசு பள்ளியில் சேர கடும் போட்டி - 6ம் வகுப்பிற்கு 500 மாணவிகள் போட்டி
நெல்லை: நெல்லை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பில் சேர கடும் போட்டி நிலவி வருகிறது. ஓரே நேரத்தில் 500 பேர் தங்களது தங்களது குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்க திரண்டதால் பள்ளியின் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
கோடை விடுமுறைக்கு பிறகு வரும் 1ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடந்து வருகிறது.

குறிப்பாக 6ம் வகுப்பு சேர்க்கைக்காக அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பெற்றோருடன் குவிந்து வருகின்றனர். அதிக கிராக்கி உள்ள பள்ளிகளில் முக்கிய பிரமுகர்கள் பரிந்துரையுடன் சீட் பிடிக்க முட்டி மோதி வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் பள்ளிக்கு இணையாக நெல்லை கல்லணை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பில் மாணவிகளை சேர்க்க கடும் போட்டி நிலவி வருகிறது. இங்கு மாணவிகள் சேர்க்கைக்கு கடந்த ஓரு வாரமாகவே பக்ககத்து ஊர்கள் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
இவர்களில் முன்னதாக வந்தவர்களுக்கு முதலில் அட்மிஷன் நடந்து வருகிறது. ஏழை மற்றும் நடுந்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல செல்வந்தர்களும் தங்கள் பெண் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்கு காரணம், இந்த அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளில் பலர் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெறுவதே ஆகும்.
சமீபத்தில் வெளியான பிளஸ்டூ தேர்வு முடிவுகளில்கூட, அரசு பள்ளி அளவில் இப்பள்ளி மாணவி மாவட்டத்தில் 3ம் இடம் வந்துள்ளார். தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளியிலும் ஓரே நேரத்தில் 500 பேர் தங்களது குழந்தைகளை சேர்க்க ஆர்வத்துடன் திரண்டது கல்வியாளர்களை சிந்திக்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications