காவிரி மருத்துவமனையில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திடீர் ஆய்வு
காவிரி மருத்துவமனையிலிருந்து குடும்பத்தினர் வெளியேறினர்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவிரி மருத்துவமனைக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வாதன் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரத்த அழுத்தம் காரணமாக காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரபரப்பட்டு வந்தது.

இதனால் காவிரி மருத்துவமனைக்கு கருணாநிதியின் உறவினர்கள் அனைவரும் விரைந்தது மற்றும் போலீசாரின் திடீர் பாதுகாப்பு ஏற்பாடுகளால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவரது உடல் நிலை குறித்து மாலைக்கு மேல் தகவல் பரவவே பெரும் கூட்டம் கூடி விட்டது.
இதற்கிடையே, கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டதாகவும் சிகிச்சை பிறகு அவரது உடல்நிலை சீராகி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொண்டர் கூட்டம் கலையாமல் இருக்கவே போலீஸார் லேசான தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். அத்தோடு தொண்டர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் கருணாநிதி குடும்பத்தினர் மருத்துவமனையிலிருந்து வெளியேறி விட்டனர்.
துணைவியர் ராஜாத்தி அம்மாள், பொதுச் செயலாளர் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்ளிட்ட குடும்பத்தினரும், கட்சி முன்னணியினரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
கருணாநிதி உடல் நிலை குறித்து பேட்டி அளித்த பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, மகன் மு.க.அழகிரி ஆகியோரும் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இந்த நிலையில் தற்போது ராசாவும், வேலுவும் மீண்டும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இதனால் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications