ஜெயேந்திரர் உள்ளிட்டோரை விடுவித்தது ஏன்?... நீதிபதி முருகனின் 253 பக்க தீர்ப்பு சொல்வது என்ன??
புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்குத் தீர்ப்பு மக்களால் பலவிதங்களில், பல கோணங்களில் அலசப்பட்டு வருகிறது. எப்படி அத்தனை பேரும் விடுவிக்கப்பட்டனர், யாருமே கொலைக்குற்றத்தில் ஈடுபடவில்லையா என்று பலரும், இது எதிர்பார்த்த தீ்ர்ப்புதான் என்று பலரும் பேசி வருகின்றனர்.
ஆனால் சங்கரராமன் கொலை வழக்கைப் பொறுத்தவரை ஜெயேந்திரர் உள்ளிட்ட 23 பேர் மீதும் காவல்துறை சுமத்திய எந்தக் குற்றச்சாட்டையும் அவர்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவில்லை என்று நீதிபதி சி.எஸ். முருகன் தனது தீ்ர்ப்பில் தெளிவாகக் கூறியுள்ளார்.
பிறழ் சாட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததும், சங்கரராமனின் குடும்பத்தாரே, கொலையாளிகளை சரிவர அடையாளம் காட்டத் தவறியதுமே இந்தத் தீர்ப்பு இப்படி வெளியாக காரணம் என்றும் கூறப்படுகிறது.
மொத்தம் 253 பக்கங்களில் தீர்ப்பு உள்ளது. அதில் புதுச்சேரி செஷன்ஸ் நீதிபதி சி.எஸ். முருகன் கூறியுள்ளவற்றிலிருந்து சில பகுதிகள்...

எதிர் சாட்சியம் அளித்த சங்கரராமன் மனைவி, மகன்
கொலை செய்யப்பட்ட சங்கரராமன் மனைவி பத்மா (அரசு சாட்சி 1), அவரது மகன் ஆனந்தசர்மா (அரசு சாட்சி 3) அரசு தரப்பு வழக்குக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர்.

மூல காரணம் நிரூபிக்கப்படவில்லை
கொலைக்கு மூலகாரணமான 30.8.2004ஆம் தேதியிட்ட இறுதி கடிதத்தை பொருத்து தலைமை புலன் விசாரணை அதிகாரி ஒப்புக்க் கொண்டபடி எந்த புலன் விசாரணையும் செய்யப்படவில்லை. கொலைக்கான மூலக் காரணம் நிரூபிக்கப்படவில்லை.

அந்த இடத்தில் இல்லாத அப்பு, கதிரவன்
குற்றத்துக்கான கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் எதிரிகளில் அப்பு, கதிரவன் ஆகியோர் சதி திட்டம் தீட்டிய சமயத்தில் அந்த இடத்தில் இல்லை. இதைத் தெளிவாக குற்றம்சாட்டப்பட்டோர் நிரூபித்துள்ளனர். கூட்டுச்சதி நிரூபிக்கப்படவில்லை.

கணேஷின் எதிர் சாட்சியம்
புகார்தாரர் கணேஷ் (அரசு தரப்பு சாட்சி 4), அரசு தரப்பு வழக்குக்கு எதிராக சாட்சியம் அளித்தார். வழக்கின் அடிப்படை ஆவணமான அப்புகார் நிரூபிக்கப்படவில்லை.

எதிர்சாட்சியமும், பிறழ் சாட்சியமும்
சம்பவத்தை பார்த்த சாட்சியும், இறந்து போன சங்கரராமனுடன் பணிபுரிந்த சாட்சிகளுமான கணேஷ் (அரசு தரப்பு சாட்சி 4), துரைக்கண்ணு (அரசு தரப்பு சாட்சி 5), குப்புசாமி (அரசு தரப்பு சாட்சி 6) ஆகியோர் அரசு தரப்புக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர். அதில் துரைக்கண்ணு, குப்புசாமி ஆகியோர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.

அடையாளம் காட்ட முன்வராத மனைவி, மகள்
கொலை செய்யப்பட்ட சங்கரராமன் மனைவி பத்மா (அரசு தரப்பு சாட்சி 1) மகள் உமா மைத்ரேயி (அரசு தரப்பு சாட்சி 2) ஆகியோர் கொலையாளிகளை நீதிமன்றத்தில் அடையாளம் காட்ட முன்வரவில்லை.

கொலையாளிகளைப் பார்த்த அத்தனை பேரும் பிறழ் சாட்சி
சம்பவ இடத்தில் சம்பவத்துக்கு முன்பும், பின்பும் கொலையாளிகளை பார்த்த சாட்சிகள் அனைவரும் பிறழ் சாட்சிகள்.

6 பேரைப் பார்த்த 20 பேரும் பிறழ் சாட்சிகளான கொடுமை
சங்கரராமன் வழக்கில் அவரை 6 பேர் கொலை செய்ததாக குறிப்பிட்டிருந்தனர். அதை நிரூபிக்க விசாரிக்கப்பட்ட 20 சாட்சிகளும் அரசு தரப்புக்கு எதிராக சாட்சியம் அளித்தனர். மேலும் அவர்கள் பிறழ் சாட்சியாக தெரிவிக்கப்பட்டனர்.

அடையாள அணிவகுப்பிலும் பிறழ் சாட்சிகள்
எதிரிகளை அடையாள அணி வகுப்பின்போது அடையாளம் காட்டிய எந்த சாட்சிகளும் நீதிமன்றத்தில் அடையாளம் காட்டவில்லை. அவர்கள் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர்.

முக்கியக் சாட்சிகள் பிறண்டதால்
எதிரிகளை அடையாள அணி வகுப்பின்போது அடையாளம் காட்டிய எந்த சாட்சிகளும் நீதிமன்றத்தில் அடையாளம் காட்டவில்லை. அவர்கள் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர்.

பல்டி அடித்த மிக முக்கியமான 17 சாட்சிகள்
எதிரிகள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு நீதித்துறை நடுவர், குற்றவியல் நடவடிக்கை சட்டம் 164 பிரிவின் கீழ் வாக்குமூலம் பெற்றார். அவ்வாறு வாக்குமூலம் கொடுத்த மிகமுக்கிய 17 சாட்சிகளும் பிறழ் சாட்சிகளானார்கள். அவர்கள் சாட்சியங்கள் ஏதும் ஏற்கப்படவில்லை.

மோட்டார் சைக்கிள்கள் அடையாளம் காட்டப்படவில்லை
கொலையாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களை, வழக்கு விசாரணையில் சாட்சிகள் அடையாளம் காட்டவில்லை.

எதிரிகள் பணம் தந்தது நிரூபணமாகவில்லை
கொலையாளிகள், போலி கொலையாளிகள் ஆகியோருக்கு எதிரிகள் பணம் தந்தது தொடர்பாக விசாரிக்கப்பட்ட 10 சாட்சிகளும் பிறழ் சாட்சிகளானார்கள். எதிரிகள்தான் பணம் தந்தனர் என்பது நிரூபிக்கப்படவில்லை.

வக்கீல்களே பிறழ் சாட்சிகளானால்...
போலி கொலையாளிகளை சென்னை ஜார்ஜ்டவுன் 15-வது பெருநகர நடுவர் மன்றத்தில் ஆஜர் செய்த கற்றறிந்த வழக்குரைஞர்கள் இருவரும் பிறழ் சாட்சிகளானார்கள். போலி குற்றவாளிகளை எதிரிகள்தான் சரணடைய வைத்தனர் என்பது நிரூபிக்கப்படவில்லை.

சாட்சியம் அளிக்க முன்வராத சாட்சிகள்
அடையாள அணிவகுப்பு நடத்திய கற்றறிந்த நீதித்துறை நடுவர்களின் சாட்சியத்துக்கு ஏற்ற விதத்தில், எந்த சாட்சிகளும் சாட்சியம் அளிக்க முன்வரவில்லை. இதனால் குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

எஸ்.பி. பிரேம்குமாரின் தேவையற்ற தலையீடு
காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார் புலன் விசாரணையில், தேவையற்ற தலையீடும், சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகள் செய்துள்ளது தொடர்பாக உச்சநீதிமன்றம் கூறியுள்ள கருத்து வழக்கு விசாரணையின்போது சாட்சி வாயிலாக தெரியவந்துள்ளது.

சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காத பிரேம்குமார்
காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார் புலன் விசாரணையில் தலையிட்டதுடன், தலைமை புலன் விசாரணை அதிகாரி (சக்திவேல்) தன்னிச்சையாக, பாரபட்சமின்றி சட்டத்துக்கு உட்பட்டு புலன்விசாரணை செய்ய அனுமதிக்கப்படவில்லை.

தவறிய புலன் விசாரணை அதிகாரி
புலன் விசாரணையின்போது உள்ள சான்றுகளை நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்த புலன்விசாரணை அதிகாரி தவறிவிட்டார்.

வேண்டுமென்றே புகுத்தப்பட்ட தேவையற்ற சாட்சிகள்
சில சாட்சிகள் (அரசு சாட்சி 30-கண்ணன்) வேண்டுமென்றே புகுத்தப்பட்டுள்ளனர்.

அச்சுறுத்தப்பட்ட சாட்சிகள்
சில சாட்சிகள் குற்றவியல் நடவடிக்கை சட்டம் 164 பிரிவின் கீழ் வாக்குமூலம் தர அச்சுறுத்தப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டோரில் கதிரவன், சின்னா ஆகியோர் சட்டத்துக்கு புறம்பாக போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சஸ்பெண்ட் செய்து வாக்குமூலம் பெற்றனர்
சம்பவத்தின்போது தலைமை காவலராகவும், தற்போது சார்பு ஆய்வாளராகவும் இருக்கும் கண்ணனை (அரசு தரப்பு சாட்சி 154), குற்றவியல் நடைமுறைச் சட்டம் 164-ன் கீழ் வாக்குமூலம் தரவேண்டி இடைக்கால பணிநீக்கம் செய்துவிட்டு, வாக்குமூலம் தந்த பிறகு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இப்பிரிவின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலம் அச்சுறுத்தல் பெயரில் பெறப்பட்டது தெரியவந்துள்ளது.

போலீ்ஸ் தரப்பில்தான் கோளாறு நிறைய
இந்த வழக்கில் நீதிபதி அளித்துள்ள தீர்ப்பில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைப் பார்க்கும்போது முழுக்க முழுக்க காவல்துறைத் தரப்பில்தான் பல தவறுகள் இருப்பதாக உணர முடிகிறது.

காவல்துறைக்கு பெருத்த தலைக்குனிவு
தமிழக காவல்துறைக்கு மிகப் பெரிய அவமானமாக இந்த தீ்ர்ப்பு கருதப்படுகிறது. காரணம் நாட்டையே உலுக்கி மிக முக்கியமான வழக்கில் எவ்வளவு அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் காவல்துறை இருந்துள்ளது என்பதை இந்த தீர்ப்பு அப்பட்டமாக காட்டியுள்ளது.

தவறு உங்கள்பக்கம்தான்
தவறு காவல்துறை பக்கம்தான் என்பதை நீதிபதி சொல்லாமல் சொல்லி விட்டார். என்ன செய்யப் போகிறார் முதல்வர் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications