மயிலாடுதுறை மாவட்டத்துக்காக போராடிய 'மாயூர யுத்தம்' இயக்கம்... கால் நூற்றாண்டு கால கனவு நிஜமானது..!
மயிலாடுதுறை: தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை இன்று உதயமாகியுள்ள நிலையில் அதன் பின்னணியில் நடைபெற்ற போராட்டங்கள் ஏராளம்.
மயிலாடுதுறை மண்ணின் மைந்தரான ஊடகவியலாளர் கோமல் அன்பரசன் 'மாயூர யுத்தம்' என்ற பெயரில் அமைப்பு தொடங்கி கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாக தனி மாவட்ட கோரிக்கையை முன்னெடுத்து வந்தார்.
இன்று தனி மாவட்டமாக மயிலாடுதுறை செயல்படுவதற்கான அடித்தளத்தை கடந்த 1990-ம் ஆண்டே அமைத்தவர் கோமல் அன்பரசன்.

மகிழ்ச்சியில் மக்கள்
நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை பிரிக்கப்பட்டு தமிழகத்தின் 38-வது மாவட்டமாக இன்று உதயமாகியுள்ளது. இதனால் மயிலாடுதுறை சுற்றுவட்டார மக்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியில் திருவிழாவை போல் இந்த நாளை கொண்டாடி மகிழ்கின்றனர். கடந்த கால் நூற்றாண்டு கால கனவு நிஜமாகிவிட்டது என்ற உணர்ச்சிப் பெருக்கில் தனி மாவட்ட கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தியவர்கள் அகமகிழ்ந்து ஆனந்தம் கொண்டுள்ளனர்.

நியாயமான காரணம்
ஏன் அவர்கள் தனி மாவட்ட கோரிக்கையை முன்வைத்து போராடினார்கள் என்று ஆராய்ந்தால் ஒரு உண்மை புலப்படுகிறது. கொள்ளிடத்தில் தொடங்கி சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, சீர்காழி, மணல்மேடு, குத்தாலம், செம்பணார்கோவில், பூம்புகார், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் மாவட்ட தலைநகரான நாகைக்கு செல்ல வேண்டும் என்றால், புதுச்சேரிக்கு உட்பட்ட காரைக்கால் வழியாகவோ, அல்லது அருகாமை மாவட்டமான திருவாரூர் வழியாகவோ தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

தனி மாவட்ட அறிவிப்பில்லை
1991-ம் ஆண்டு தஞ்சை மாவட்டம் பிரிக்கப்பட்டபோதே மயிலாடுதுறை மாவட்ட கோரிக்கை எழுந்தது. இதனிடையே 1997-ம் ஆண்டு நடைபெற்ற நாகை மாவட்ட பிரிவினையின் போதும் திருவாரூர் தான் தனி மாவட்டமாக கொண்டுவரப்பட்டதே தவிர மயிலாடுதுறை கொண்டுவரப்படவில்லை. இத்தனைக்கும் நாடாளுமன்ற தொகுதியின் தலைமையிடமாக மயிலாடுதுறை திகழ்ந்தும் மாவட்ட கோரிக்கை மட்டும் நிறைவேறியபாடில்லை.

மாயவரம்
இதனால் மயிலாடுதுறை மண்ணின் மைந்தரும், ஊடகவியலாளருமான கோமல் அன்பரசன் தலைமையில் செயல்பட்ட 'மாயூர யுத்தம்' (மயிலாடுதுறைக்கு மாயவரம் என்ற பெயரும் உண்டு) என்ற அமைப்பினர், மயிலாடுதுறையை மாவட்ட தலைநகராக மாற்றியே தீருவது என கங்கணம் கட்டினர். இதற்கான தேவைகளை அரசுக்கும் விழிப்புணர்வை மக்களுக்கும் எடுத்துரைத்தனர்.

அரசாணை
இதனிடையே மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்குவது தொடர்பாக 2004-ம் ஆண்டு ஜெயலலிதாவும், 2010-ம் ஆண்டு கருணாநிதியும் பரிசீலித்தார்கள். கோப்புகள் கூட தயார் செய்யப்பட்டு பின்னர் என்ன காரணத்தினாலோ அந்தப் பணிகள் அப்படியே முடங்கின. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தனி மாவட்ட கோரிக்கையும், அதன் நியாயமான காரணங்களும் பல மாதங்களுக்கு முன்பே எடுத்துரைக்கப்பட்டன. இதையடுத்து கடந்த கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி மயிலாடுதுறை தனி மாவட்ட அறிவிப்பை சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதையடுத்து அதற்கான அரசாணை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு இன்று செயல்படவும் தொடங்கிவிட்டது.












Click it and Unblock the Notifications