கவுன்சிலர்கள் செய்யும் கலாட்டா! நெல்லையிலிருந்து வரும் தொல்லை! கண் சிவந்த முதலமைச்சர் ஸ்டாலின்!
நெல்லை: நெல்லை மாவட்ட திமுகவில் நிலவி வரும் கோஷ்டிப்பூசல் அக்கட்சியின் தலைமைக்கு பெரும் தலைவலியை கொடுத்திருக்கிறது.
குறிப்பாக மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் செய்யும் கலாட்டா முதல்வரை கண் சிவக்க வைத்திருக்கிறது. திமுக மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களை பின்னிருந்து இயக்குவது யார் என்ற விவரம் அண்ணா அறிவாலயம் மேஜையில் இருக்கிறது.

இதனால் இனி வரும் நாட்களில் நெல்லையை சேர்ந்த சிலர் கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நெல்லை மாவட்ட திமுகவை பொறுத்தவரை ஆவுடையப்பன், அப்பாவு, அப்துல் வஹாப், மைதீன் கான், மேயர் சரவணன், என பல கோஷ்டிகள் உள்ளன. இந்த கோஷ்டிப்பூசல்களுக்கு முடிவு கட்டத் தான் தங்கம் தென்னரசுவை நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக்கி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன் கான் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கவுன்சிலர் மகேஸ்வரி உள்ளிடோர் மாமன்றக் கூட்டத்தில் புகார் கூறி மேயருக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டனர். திமுக மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது தலைமைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்போது என்றில்லை எப்போது பார்த்தாலும் நெல்லை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் சலசலப்பு இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. இதற்கும் பதவி பறிக்கப்பட்ட அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.வுக்கும் தொடர்பு உள்ளதா என்ற ரகசிய விசாரணையையும் திமுக தலைமை முடுக்கி விட்டிருக்கிறது. நெல்லை மேயர் சரவணனை மாற்றக்கோரி திமுக கவுன்சிலர்கள் சிலர் அமைச்சர் நேருவை சந்தித்து முறையிட்டதும் அவர் சமாதானம் பேசி அனுப்பி வைத்ததும் கடந்த கால நிகழ்வாகும்.
நெல்லை மேயர் சரவணனுக்கும் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.வுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தங்களுக்கு எதிராக கவுன்சிலர்களை தூண்டிவிட்டு அப்துல் வஹாப் தரப்பு தான் கலாட்டா செய்வதாக மேயர் சரவணன் தரப்பு கருதுகிறது.












Click it and Unblock the Notifications