பிச்சைக்காரன் பட யோசனை மக்களை பிச்சைக்காரர்கள் போலாக்கிவிட்டதே.. சில்லரை போடுகிறது ரிசர்வ் வங்கி
பணத் தட்டுப்பாட்டால் சென்னையிலுள்ள ரிசர்வ் வங்கியின் கிளை மக்களுக்கு சில்லரைகளை வழங்கி வருகிறது.
சென்னை: ரிசர்வ் வங்கியிலிருந்து போதிய பணம் வங்கிகளுக்கு சப்ளையாகவில்லை என்பதால், வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு சில்லரை வழங்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என கூறி, புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி இரவு அதிரடியாக அறிவித்தார்.
இதனால் மக்கள், தங்கள் கைவசம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளிலும், பணம் எடுப்பதற்கு ஏ.டி.எம். மையங்களின் வாசலின் முன்பும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள்.

திணறல்
புதிய ரூ.500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை தேவைப்படும் அளவுக்கு வெளியிட முடியாமல் ரிசர்வ் வங்கி திணறி வருகிறது. 24 மணி நேரமும் பணத்தை அச்சடித்தாலும், பணத்தேவையை ஈடுகட்ட முடியவில்லை.

குறைவான சப்ளை
இதனால் வங்கிகளுக்கு வழங்கும் பணத்தின் அளவை ரிசர்வ் வங்கி பெருமளவுக்கு குறைத்துள்ளது. வங்கிகள் கேட்கும் பணத்தில் 10 சதவீதம் அளவுக்குத்தான் சப்ளை செய்யப்படுகிறது. தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 நோட்டுகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு வங்கி கணக்கில் இருந்து காகித பணத்தை கொடுக்க முடியவில்லை.

ரிசர்வ் வங்கிக்கே இந்த நிலை
வங்கிகள் கதை ஒருபக்கம் என்றால், "ஜாமீன், கடல்லயே இல்லையாம்.." என்று சொல்வதை போல, "ரிசர்வ் வங்கியின் கிளையிலேயே பணம் இல்லையாம்.." என்பதுதான் சென்னை யதார்த்தம். சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில், பணத்தட்டுப்பாடு தலை விரித்து ஆடுகிறது. ரூபாய் கேட்டு வந்தவர்களுக்கு 10 ரூபாய் நாணயங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிந்தி, சிதறிவிடும் என்பதால், அந்த நாணயங்களை ரிசர்வ் வங்கி பொட்டலம் போட்டு கொடுத்துள்ளது. அதை மக்கள் வாங்கிக்கொண்டு திரும்பிய காட்சி அதிர்ச்சியளித்தது.

இனியாவது தீருமா அவலம்
500, 1000 ரூபாய் நோட்டை ஒழிக்க வேண்டும் என சமீபத்தில் திரைக்கு வந்த பிச்சைக்காரன் படத்தில் யோசனை கூறிவது போல காட்சிவரும். இப்போது மக்கள் சில்லரையை கையில் தூக்கி அலைவதை பார்க்கும்போது..!
இதனிடையே, நாளை முதல் சென்னையில் புதிய 500 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வினியோகிக்க உள்ளன. புதிய 500 ரூபாய் நோட்டுகள் வினியோகித்த பின்பு தற்போது நிலவும் பணம் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications