அட, நம்ம ஆமை, முயல் கதை உண்மை தான் போல... இந்த வீடியோவைப் பாருங்களேன்!
சென்னை: சிறுவயதிலேயே நாம் அனைவரும் கேட்ட கதைகளில் முக்கியமானது பாட்டி வடை சுட்ட கதையும், முயல்- ஆமை போட்டி கதையும். இன்றளவும் இந்த கதை அப்படியே தொடர்கிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியால் நம் குழந்தைகள் எவ்வளவோ முன்னேற்றங்களைச் சந்தித்தாலும், இந்தக் கதைகளையும் இது தரும் பாடத்தையும் அவர்கள் தவற விடுவதில்லை. அந்தளவிற்கு நம் வாழ்வோடு ஒன்றிப் போனது இந்தக் கதைகள்.
அதிலும் குறிப்பாக முயல் - ஆமை கதையைச் சொல்ல வேண்டும். உடல் அளவில் எவ்வித குறைகள் இருந்தாலும், இலக்கை நோக்கிய தெளிவான பயணம் நிச்சயம் வெற்றியைப் பரிசாகத் தரும் என்பதே இந்த கதையின் கருத்து.
இது நாள் வரை கற்பனைக் கதையாக மட்டுமே அறியப்பட்டு வந்த இந்தக் கதையை நிஜத்தில் பரீட்சித்து பார்த்துள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. ஆனால், இது எந்த நாட்டில் நடந்தது எனத் தெரியவில்லை.
நிஜமாகவே ஆமை ஒன்றிற்கும், முயல் ஒன்றிற்கும் போட்டி நடத்தப்படுகிறது. ஆரம்பத்தில் வேகமாக ஓடும் முயல் பின்னர் தன்னைச் சுற்றிய ஆரவாரங்களால் கவனம் கலைந்து ஒரே இடத்தில் நின்று வேடிக்கைப் பார்க்கிறது. ஆனால், இது எதைப் பற்றியும் கவலைப்படாத ஆமையோ, சுற்றியுள்ளவர்களின் சத்தத்தை காதில் போட்டுக் கொள்ளாமல் கடமையே கண்ணாக தன் இலக்கை பொறுமையாக அடைந்து வெற்றியடைகிறது.
இனி நம் குழந்தைகளுக்கு இந்த வீடியோவைக் காட்டி ஆதாரப்பூர்வமாக முயல் - ஆமை கதையை நாம் சொல்லலாம்.