அடடா, மறுபடியும் இதே முகங்களையே பார்க்கனுமா..??
சென்னை: இதோ மீண்டும் ஒரு தேர்தல் களம் வந்து விட்டது. பிரசார பீரங்கிகள் மக்களைக் குறி வைத்துத் தாக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரே ஏற்கனவே பலமுறை பார்த்து சலித்த அதே முகங்களையே மீண்டும் பார்க்கும் நிலையில் மக்கள் உள்ளனர்.
புதியவர்களைக் களம் இறக்கும் திட்டம் எந்த முக்கியக் கட்சிகளிடமும் இருப்பதாக தெரியவில்லை. எனவே கடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலின்போது பிரசாரத்திற்கு வந்து தொண்டை கிழிய கத்தியவர்கள்தான் மீண்டும் முகம் மலர ஓட்டு கேட்க வரப் போகிறார்கள்.
பழையவர்களைப் பயன்படுத்துவதில் ஒரு வசதி உள்ளது. அவர்களுக்கு பிரசார அனுபவம் இருக்கும் என்பதால் அதிக அளவிலான பயிற்சி தேவைப்படாது. மேலும் கொடுக்கிற காசை வாங்கிக் கொண்டு ஜம்மென்று பேசி விட்டுச் செல்வார்கள் என்பதால் புதியவர்களை முயற்சிக்க விரும்பவில்லையாம் கட்சிகள்.

நடிகர் நடிகையர்கள்
அதிமுக, திமுக போன்ற கட்சிகள் காலம் காலமாக நடிகர், நடிகைகளை பிரசார பீரங்கிகளாகப் பயன்படுத்துவது பாரம்பரியமாக தொடர்கிறது. காங்கிரஸும் கூட நடிகர் நடிகையரை பிரசாரத்திற்குப் பயன்படுத்தியுள்ளது.

அதிமுக நடிகர், நடிகையர்
அதிமுகவில்தான் அதிக அளவிலான நடிகர்கள், நடிகையர் பிரசாரத்திற்காக களம் குதிப்பது நீண்ட காலமாக வழக்க்தில் உள்ளது. எம்.ஜி.ஆர் நடிகராக இருந்தவர் என்பதாலும், அதேபோல ஜெயலலிதா நடிகையாக இருந்தவர் என்பதாலும் இப்படி ஒரு பழக்கத்தை அதிமுக விடாமல் பின்பற்றுவதாக தெரிகிறது.

பெரிய பட்டாளம்
மற்ற கட்சிகளை விட அதிமுகவில்தான் ஏகப்பட்ட நடிகர், நடிகையர் பிரசார பீரங்கிகளாக உள்ளனர். அவர்களில் பலருக்கு ஜெயலலிதா பதவி கொடுத்து அழகும் பார்த்தவர் என்பதால் எப்படியாவது ஏதாவது ஆதாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல நடிகர், நடிகையர் அதிமுகவுக்காக பிரசாரம் செய்யத் துடிப்பது வழக்கம்.

செந்தில்
நடிகர் செந்தில் நீண்ட காலமாக அதிமுகவுக்காக பிரசாரம் செய்து வருபவர். ஜாலியாகப் பேசி, காமெடியாகப் பேசி வாக்கு சேகரிப்பார்.

சிங்கமுத்து
கடந்த சட்டசபைத் தேர்தல் மூலம் களத்தில் குதித்தவர் சிங்கமுத்து. வடிவேலுவுக்கு எதிராக பேசுவதற்காக இவரை களத்தில் இறக்கியது அதிமுக. அவரும் வடிவேலுவை எதிர்த்துப் பேசி பிரசாரம் செய்தார்.

குயிலி
நடிகை குயிலியும் நீண்ட காலமாக அதிமுகவுக்காக பிரசாரம் செய்து வருபவர். நீண்ட நேரம் விடாமல் பேசக் கூடிய திறமை படைத்தவர்.

சி.ஆர். சரஸ்வதி
எதிர்க்கட்சிகளை கலந்து கட்டி புகுந்து புறப்பட்டு பொளந்து கட்டிப் பேசக் கூடியவர் சிஆர். சரஸ்வதி. நீண்ட காலமாக இவர் அதிமுகவின் பிரசார பீரங்கியாக வலம் வருகிறார்.

விந்தியா
சில காலமாக இவரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதிமுக சார்பில் விவாதங்களிலும் கலந்த கொண்டவர் (ஜெயா டிவியில்).

பாத்திமா பாபு
செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் பிரசார பீரங்கியாக மாறியவர் பாத்திமா பாபு. நாடகம், செய்திப் பணி என்று பிசியாக இருந்தாலும் கூட தேர்தல் சமயத்தில் தீவிர அதிமுக பிரசாரகராக மாறி விடுவார்.

ஆனந்தராஜ்
நடிகர் ஆனந்தராஜ் ஒவ்வொரு தேர்தலுக்கும் அதிமுகவுக்காக தீவிரப் பிரசாரம் செய்வது வழக்கம். நீண்ட காலமாக தேர்தலில் டிக்கெட்டையும் எதிர்பார்த்துள்ளார். ஆனால் கிடைக்கத்தான் மாட்டேன் என்கிறது.

மனோபாலா
நடிகர் மனோபாலாவும் கடந்த தேர்தலில் பிரசாரம் செய்தார். இதேபோல வையாபுரி உள்ளிட்ட பலர் உள்ளனர் அதிமுகவில்.

குஷ்பு
முன்பு திமுகவில் பிரசார பீரங்கியாக வலம் வந்தவர் குஷ்பு. இவருக்கு கடந்த தேர்தலில் தனி முக்கியத்துவம் கொடுத்து பிரசாரம் செய்ய விட்டனர். இந்த முறை இவர் காங்கிரஸ் பிரசார பீரங்கியாக மாறியுள்ளார்.

நக்மா
காங்கிஸில் இணைந்துள்ள நடிகை நக்மாவும் இந்த முறை தமிழகத்தில் காங்கிரஸுக்காக தீவிரமாக வாக்கு சேகரிக்கப் போகிறார். இதனால் குஷ்பு, நக்மா என இரு அட்டகாசமான பிரசார பீரங்கிகளை காங்கிரஸ் பெற்றுள்ளது அதற்குப் பலம் தரும் என்று நம்பலாம்.

திமுகவுக்கு வழக்கம்போல் சந்திரசேகர்
திமுக தரப்பில் வழக்கம் போல சந்திரசேகர் உள்ளிட்ட பிரசார பீரங்கிகள் உள்ளனர். கடந்த காலத்தில் பிரசாரம் செய்து வந்த நெப்போலியன் தற்போது பாஜகவுக்குப் போய் விட்டார்.

புதியவர்கள் வருவார்களா?
இப்போதைக்கு இந்தப் பழைய முகங்கள்தான் மீண்டும் மக்களை சந்திக்க வரும் என்ற நிலை உள்ளது. புதியவர்கள் யாரேனும் உள்ளே நுழைவார்களா என்பதை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications