நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே! திருவாரூரில் தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மறைந்த அம்மாவின் நினைவாக அவரது பெயரில் தாஜ்மஹால் போன்ற பிரம்மாண்ட மணிமண்டபத்தை 1 ஏக்கர் பரப்பளவில் கட்டியிருக்கிறார் அவரது மகன்.
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் கிராமத்தை சேர்ந்த சேக்தாவூது -ஜெய்லானி பீவி அம்மாள் தம்பதியின் மகன் அமீருதீன். இவர் சென்னையில் தொழிலதிபராக உள்ளார். தாய் தந்தை இருவர் மீதும் அளவுகடந்த பாசம் கொண்ட இவர் அவர்களது பெயரில் தனது சொந்த கிராமத்தில் தொடர்ந்து ஏழை எளியோருக்கு உதவிகள் செய்து வந்திருக்கிறார்.

இதனிடையே தந்தை மறைந்து 20 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் தாயார் ஜெய்லானி பீவி அம்மாள் கடந்த 2020ஆம் காலமானார். இதையடுத்து அவரது பெயரில் அம்மையப்பன் கிராமத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் 8,000 ஏக்கர் சதுர அடியில் பிரம்மாண்ட மணிமண்டபம் ஒன்றை கட்டியிருக்கிறார் தொழிலதிபர் அமீருதீன்.

பார்ப்பதற்கு தாஜ்மஹாலை போன்றே காணப்படும் இந்த மணிமண்டபம் முழுக்க முழுக்க ராஜஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்ட வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டதாகும். இதனை சாதி மதம் பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவலாகும்.
மணிமண்டபத்துடன் சேர்த்து மதரஸா, பள்ளிவாசலையும் கட்டியுள்ளார் அமிருதீன். இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் இக்கட்டிடத்தை பார்க்கும் போது வளைகுடா நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கின்றன.

பெற்றோரை முதியோர் இல்லத்தில் தவிக்கவிடும் பிள்ளைகளுக்கு மத்தியில் தாயாருக்காக தாஜ்மஹால் கட்டக் கூடிய பிள்ளைகளும் இருக்கத் தான் செய்கிறார்கள்.












Click it and Unblock the Notifications