அவதூறு வழக்கில் விஜயகாந்த் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு!
ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய வழக்கில் விஜயகாந்த் ஆஜராகாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்ரீவில்லிப்புத்தூர்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ஏப்ரல் 13 ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் ஆஜராக ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012 -ம் ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த், அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கிறிஞர் மங்களசாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு மார்ச் 2-ம் தேதி விஜயகாந்த் நேரில் கண்டிப்பாக ஆஜராக கடந்த டிசம்பர் 22-ம் தேதி நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவர் உடல் நலம் சரியில்லாததால் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சிவக்குமார், ஏப்ரல் 13-ம் தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். மேலும் அன்றைய தினம் விஜயகாந்த் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.