அந்நிய செலவாணி உயர தேங்காயை மதிப்புக் கூட்டுப் பொருளாக அறிவிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
சென்னை: இந்தியாவில் உற்பத்தியாகும் தேங்காய்களை மதிப்புக் கூட்டுப் பொருளாக்கினால் நாட்டின் அந்நியச் செலவாணி உயரும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தஞ்சை, திருவாரூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தென்னை மரங்களின் மூலம் கிடைக்கப்பெறும் தேங்காய் விலையானது தென்னை விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை.

உரித்த தேங்காய்களுக்கு உரிய விலையை அரசு நிர்ணயம் செய்திட வேண்டும். ஒரு கிலோ கொப்பரை தேங்காய்க்கான ஆதார விலையை ரூ.150 ஆக மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும். தேங்காய் அதிகம் விளையும் பகுதிகளில் அரசு கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் அமைத்து, கொப்பரைகளை முழுமையாக கொள்முதல் செய்திட வேண்டும்.
அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரைகளை எண்ணெய்யாக்கி, அந்த தேங்காய் எண்ணெய்யை அரசே நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் விற்பனை செய்தால் தென்னை விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பயன்பெறுவார்கள். தென்னை விவசாயத்துக்கு சலுகைகள் மற்றும் மானியங்களை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
தென்னை மரத்தின் மூலம் கிடைக்கும் தேங்காய் நார், கொட்டாங்குச்சி, தென்னங்கீற்று போன்றவற்றின் விற்பனையையும் அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இந்தியாவில் உற்பத்தியாகும் தேங்காய்களை மதிப்புக் கூட்டுப் பொருளாக்கி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நிய செலவாணியை ஈட்ட முடியும்.
எனவே, தென்னை விவசாயிகள் மற்றும் தென்னை சார்ந்த தொழிலைச் செய்பவர்கள் பயன்பெறும் வகையில் நலத் திட்டங்களை செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும் என்று வாசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications