அட ஆச்சர்யமே... கனமழையிலும் நிரம்பாத உத்திரமேரூர் ஏரி!
காஞ்சிபுரம்: தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் உத்திரமேரூர் ஏரி மட்டும் இன்னமும் நிரம்பாமல் உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஆங்காங்கே அணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வருகின்றன. பல இடங்களில் ஏரிகள் உடையும் அபாயமும் காணப்படுகிறது. குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், உத்திரமேரூர் வைரமோகன் ஏரி மட்டும் இன்னமும் நிறையவில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் இந்த ஏரியும் ஒன்று. இந்த ஏரி சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இங்கு கடந்த சில நாள்களாக மழை பலத்த மழை பெய்தும் நீர் நிரம்பி வழியும் கலங்கள் விழும் மடை அருகே நீர்மட்டம் உயரவில்லை.
உத்தரமேரூர் நீர்வரத்துப் பகுதியில் உள்ள முருக்கேரி கிராமத்தில் ஏரிக்கரையை பலப்படுத்த லாரி செல்வதற்கு கொட்டப்பட்ட கிராவல் மணல்களை அப்புறப்படுத்தாமல் உள்ளதால் ஏரிக்கு நீர் வரத்து குறைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.
ஆனால், உத்திரமேரூரைச் சுற்றியுள்ள அனைத்துக் குளங்கள், குட்டைகள் நிரம்பி வழிகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.