அதிமுக கோட்டை கொங்கு மண்டலத்தில், கொடி நாட்ட உதவுமா ஈரோடு திமுக மண்டல மாநாடு?
Recommended Video

சென்னை: ஈரோட்டில் நடைபெறும் மண்டல மாநாடு திமுகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அக்கட்சியை இந்த மண்டலத்தில் வலுப்படுத்தியே தீர வேண்டிய கட்டாயத்தில் இம்மாநாடு நடைபெறுகிறது.
நீலகிரி, கோவை,திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய திமுகவின், 15 'கட்சி மாவட்டங்களை' கொண்ட மண்டல மாநாடு ஈரோடு மாவட்டம் சரளை பகுதியில் இன்று காலை துவங்கியது.
இந்த மாநாட்டிற்காக 41 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மாநாட்டு பந்தலும், 300 ஏக்கர் பரப்பளவில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்துமிடம், தலைவர்கள் அமர்வதற்காக கருங்கல் மேடை சுமார் 2 ஆயிரத்து 700 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

திமுகவுக்கு முக்கியம்
ஈரோட்டில் நடைபெறும் திமுகவின் இந்த மண்டல மாநாடு அக்கட்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு காரணம், கடந்த பல தேர்தல்களிலும் கொங்கு மண்டலத்தில் திமுக சோபிக்க முடியவில்லை. மின்வெட்டு, சில மா.செக்கள் செய்த அடாவடிகள், நில அபகரிப்புகள் போன்றவை திமுகவுக்கு எதிரான மனநிலையை கொங்கு மண்டலத்தில் உருவாக்கிவிட்டதாக கூறுகிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள். ஆனால், எம்.ஜி.ஆர் காலம் தொட்டே கொங்கு மண்டலம், அதிமுகவின் கோட்டையாக மாறிவிட்டதாக கூறுகிறார்கள் வேறு சில அரசியல் பார்வையாளர்கள். எது எப்படி என்றாலும், கொங்கு மண்டலத்தில் அதிமுகவை ஒப்பிட்டால் திமுக பலவீனமாக இருப்பது கண்கூடுதான்.

தேர்தலில் திமுக நிலை
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் ஆகியவற்றில் மொத்தம் 61 தொகுதிகள் உள்ளன. 2001 சட்டசபை தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி 38 தொகுதிகளைக் கைப்பற்றியது. 2006இல் அதிமுக ஆட்சியை பிடிக்க முடியாத நிலையிலும் கொங்கு மண்டலத்தில் இருந்து 16 பேர் எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு 2011 தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி இந்த மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளில் 55 தொகுதிகளைப் பிடித்து அசத்தியது.

அதிமுக கோட்டை
2016 தேர்தலில் மொத்தமுள்ள 61 தொகுதிகளில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைத் தவிர 60 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 47 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளையும் அதிமுகவே கைப்பற்றியது. சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளையும், கோவையில் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளையும் அதிமுக அள்ளியது. திருப்பூரில் 8 தொகுதிகளில் 6 தொகுதிகளையும், நாமக்கல்லில் 6 தொகுதிகளில் 5 தொகுதிகளையும், கிருஷ்ணகிரியில் 6 தொகுதிகளில் 3, தருமபுரியில் 5 தொகுதிகளில் 3, கரூரில் தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளில் 2, நீலகிரியின் 3 தொகுதிகளில் 1ஐ அதிமுக கைப்பற்றியது.

திமுக நிலை
ஆனால், திமுக, காங்கிரஸ் கூட்டணியோ, இந்த 9 மாவட்டங்களில் உள்ள தாராபுரம் (தனி), மடத்துக்குளம், உதகை, கூடலூர், சிங்காநல்லூர், சேலம் வடக்கு, பரமத்தி வேலூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, தளி, பென்னாகரம், தருமபுரி, குளித்தலை ஆகிய 13 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இத்தனைக்கும் அதிமுக தனித்து போட்டியிட்டது. திமுகவோ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேமுதிக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் தனியாக போட்டியிட்டனர்.

உற்சாகம்
திமுக வலுவான எதிர்க்கட்சியாக உருவானபோதிலும், ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம், கொங்கு மண்டலத்தில் திமுக பெற்ற தோல்விதான். இந்த நிலையில்தான், ஈரோட்டில் இன்று துவங்கி நாளை வரை நடைபெற உள்ள கொங்கு மண்டல மாநாடு திமுகவுக்கு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அம்மண்டலத்தை சேர்ந்தவரான எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக உள்ள நிலையில், கொங்கு மண்டலத்தில் திமுக தனது இருப்பை இன்னும் பலப்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. எனவே திமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து, ஊக்குவித்து, பொதுமக்களிடையே பிரச்சாரத்தை கொண்டு செல்ல இந்த மாநாடு உதவும் என திமுக தலைமை நினைக்கிறது.












Click it and Unblock the Notifications