வாக்காளருக்கு அதிமுக பணம் சப்ளை: திமுக வேட்பாளர் சாலை மறியல்
தேனி: பணம் பட்டுவாடா செய்யும் அதிமுக தொண்டர்களை கைது செய்ய வலியுறுத்தி தேனி தொகுதி திமுக வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கம் தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி தொகுதியில் திமுக சார்பில் பொன்.முத்துராமலிங்கம் வேட்பாளராக களம் காண்கிறார். இந்நிலையில், தொகுதிக்குட்பட்ட பெரியகுளம் நகராட்சியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து முத்துராமலிங்கமும் திமுக தொண்டர்களும் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக கூறப்பட்ட பெரியகுளத்திலுள்ள தண்டுபாளையம் பகுதிக்கு சென்றனர். அங்கு கையும் களவுமாக ஒரு தொண்டரை பிடித்ததாக கூறப்படுகிறது. பிறர் தப்பியோடிவிட்டனர்.
அவர்களையும் போலீசார் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முத்துராமலிங்கம் தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரியகுளம் நகரின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் சமாதானப்படுத்தி ஆர்ப்பாட்டத்தை விலக்கி போக்குவரத்தை சீர் செய்தனர்.