மெட்ரோ ரயிலில் பயணிப்பது எப்படி? "வித்அவுட்" வேலை நடக்காது..
சென்னை : சாதாரணமாக மின்சார ரயிலில் பயணிப்பது போன்று டிக்கெட்டு எடுத்துக் கொண்டு மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய முடியாது. இதற்கென மேலை நாடுகளைப் போன்று புதிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மெட்ரோ ரெயிலில் பயணிக்க டிக்கெட்டுக்கு பதில் டோக்கன் வழங்கப்படுகிறது.
மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய வருபவர்கள், முதலாவதாக நேரடியாக முதல் தளத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டருக்கு செல்ல வேண்டும். எங்கு செல்ல வேண்டும் என்பதை கவுண்ட்டரில் உள்ள ஊழியரிடம் கூறினால், அதற்கான கட்டணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட் வழங்குவார்.

பொதுவாக, ரெயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் காகிதத்தில் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால், மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய டிக்கெட்டுக்கு பதில் நீல நிறத்தில் டோக்கன் வழங்கப்படுகிறது.
இந்த டோக்கனை பெற்றுக்கொண்டு, மேலும் செல்ல வேண்டும். அப்போது, கையில் உடைமைகள் எதுவும் இருந்தால், அவை அங்குள்ள ஸ்கேனர் கருவியில் சோதனை செய்யப்படும். பின்னர், உடைமைகளை பெற்றுக்கொண்டு, அருகில் இருக்கும் நுழைவுப்பகுதியில் உள்ள கம்ப்யூட்டர் திரை மீது டோக்கனை வைத்தால் தானியங்கி வாயில் திறக்கும்.
அதன் பிறகு உள்ளே சென்று அங்குள்ள எஸ்கலேட்டர் மூலம் மெட்ரோ ரெயில் வரும் 2-வது தளத்திற்கு சென்று ரெயிலில் ஏறி பயணிக்க முடியும்.
குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் இறங்கிய பின்னர், வெளியே வரும்போது டோக்கனை வாயிலில் உள்ள துளை வழியாக போடவேண்டும். அப்போதுதான் வெளியே வர தானியங்கி கதவு திறக்கும்.
இவ்வாறு டோக்கன்கள் சேகரிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் பயணிகளுக்கு வழங்கப்படும். அதனால், டிக்கெட் எடுக்காமல் யாரும் மெட்ரோ ரெயிலில் ஓசி பயணம் செய்ய முடியாது.
ஒவ்வொரு ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர்கள் இருப்பது போன்று, டிக்கெட் வழங்கும் எந்திரமும் வைக்கப்பட்டுள்ளது. அதாவது, டிக்கெட் கவுண்ட்டரில் கூட்டம் அதிகமாக இருந்தால், டிக்கெட் வழங்கும் எந்திரத்தின் மூலம் டோக்கன் பெற முடியும்.
முதலில் டிக்கெட் வழங்கும் எந்திரத்தில் உள்ள தொடுதிரையில், பயணிக்க விரும்புவது சிறப்பு வகுப்பா?, பொது வகுப்பா? என்பதை தெரிவிக்க வேண்டும்.
அதன்பிறகு மெட்ரோ ரெயில் இயக்கப்படும் வழித்தடத்தின் வரைபடம் வரும். அதில், எந்த இடத்தில் இருந்து எந்த இடம் செல்ல வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.
அதற்கான கட்டணத்தை எந்திரம் காண்பிக்கும். அதன்பிறகு, எத்தனை பேர் என்பதை தெரிவிக்க வேண்டும். அதன்பிறகு, மொத்த கட்டணம் எவ்வளவு என்பதை எந்திரம் காண்பிக்கும். அதற்கான தொகையை ரூ.5, ரூ.10 நாணயமாகவோ, அல்லது ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 நோட்டாகவோ எந்திரத்தில் உள்ள துளை வழியாக செலுத்த வேண்டும்.
எத்தனை பேர் பயணம் செய்ய இருப்பதாக குறிப்பிட்டோமோ அத்தனை டோக்கன் வரும். மீதி பணம் மற்றொரு துளை வழியாக வெளியே வரும்.
அதன்பிறகு, டோக்கனை எடுத்துச்சென்று ரெயிலில் பயணிக்கலாம்.
வெளிநாடுகளைப் போன்று டிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது சற்று சிரமத்தை ஏற்படுத்தினாலும் இந்த முறை பழக சிறிது நாளாகும் என்று பயணிகள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications