ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அரசு செயல்படவில்லை - எச். ராஜா - வீடியோ
டெங்குவை ஒழிப்பதில் தமிழக உள்ளாட்சித்துறையும், மருத்துவத்துறையும் செயலிழந்து காணப்படுகிறது என்று எச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழக அரசு செயலிழந்து விட்டது என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் எல்லையோர பாதுகாப்பு குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, நமது நாட்டை பயங்கரவாத சக்தி மற்றும் பிரிவினைவாதிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை என்றார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவ காரணமாக இருக்கும் கொசுவை ஒழிக்க முடியவில்லை. உள்ளாட்சி நிர்வாகம் கொசு ஒழிப்பு நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். ஆனால் உள்ளாட்சி அந்த நடவடிக்கையை எடுக்கவில்லை. மருத்துவத்துறையும் சரியான நடவடிக்கையை எடுக்கவில்லை.
டெங்குவை ஒழிப்பதில் தமிழக உள்ளாட்சித்துறையும், மருத்துவத்துறையும் செயலிழந்து காணப்படுகிறது. அதனால்தான் மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பியிருக்கிறது. தமிழகத்தில் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அரசு செயல்படவில்லை என்றும் எச். ராஜா கூறினார்.