தனி நபராக 2 திருடர்களுடன் சிக்கித் தவித்த போலிஸ்காரர்.. உதவிக்கு வராத பொதுமக்கள்
சென்னை: சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இரண்டு திருடர்களை ஒரு போலீஸ்காரர் பிடிக்க முயன்றார். அப்போது திருடர்கள் இருவரும் சேர்ந்து போலீஸ்காரரை கடுமையாக தாக்கினர். ஆனாலும் விடாமல் தனி நபராக போராடினார் அந்த போலீஸ்காரர். இதனை அங்கு கூடியிருந்த மக்கள், பயணிகள் வேடிக்கை பார்த்தனரே தவிர ஒருவர் கூட போலீஸ்காரருக்கு உதவ முன்வரவில்லை.
சென்னையில் திருடர்கள் அட்டகாசம் பெருகிப் போய்க் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் வழிப்பறி, வீடு புகுந்து திருடுவது என்று திருடர்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட மடிப்பாக்கம் பகுதியில் ஒரு திருடனை போலீஸார் பிடித்து விசாரித்துக் கொண்டிருந்தபோது அவன் தப்பி விட்டான். அவனைப் பிடிக்க ஒரு போலீஸ்காரர் முயன்றபோது அவருக்கு உதவ பொதுமக்கள் தரப்பில் யாருமே இல்லை. தனி நபராக போராடிய அவருக்கு அங்கிருந்த சிலர் உதவிக் கரம் நீட்டியும் கூட திருடனைப் பிடிக்க முடியாமல் போய் விட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு ஏழு மணியளவில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இரண்டு திருடர்களிடம் சிக்கி ஒரு போலீஸ்காரர் படாதபாடு பட்டு விட்டார்.
கோயம்பேடு 100 அடி ரோட்டில் சங்கீதா ஓட்டல் அருகே நேற்று இரவு 7 மணியளவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரே மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். வழிப்பறி கொள்ளையர்களான இருவரும் போலீசாரைக் கண்டதும் தப்பிக்க முயன்றனர்.
அப்போது லோகநாதன் (53) என்ற போலீஸ்காரர் 2 பேரையும் மடக்கி பிடித்தார். ஆனால் கொள்ளையர்கள் அவருடன் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். பின்னர் அவரை தள்ளிவிட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். கொள்ளையர்கள் விட்டுச் சென்ற பல்சர் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீஸ்காரருடன் 2 பேர் கட்டிப்புரண்டு சண்டை போட்ட போது, அதனை அங்கிருந்த பொது மக்கள் வேடிக்கை பார்த்தனர். ஒருவர் கூட கொள்ளையர்களை பிடிப்பதற்கு முன் வரவில்லை என்று போலீஸ் தரப்பில் வேதனை தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications