குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து 33 பவுன் நகை கொள்ளை – கோவையில் பரபரப்பு
கோவை: கோவையில் திருடர்கள் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து நகையைக் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், நீலிக்கோணாம்பாளையம், பழனியப்பா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் தனியார் வங்கி மேலாளர். இவரது மனைவி நான்சி கணினி மென்பொருள் பொறியாளராக உள்ளார். இவர்களுக்கு எட்டு மாத குழந்தை உள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை மனோஜ் வேலைக்கு கிளம்பி சென்றுவிட்டார். குழந்தையுடன் நான்சி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, இரண்டு பேர் கோவிலுக்கு நிதி வசூலிப்பதாக உண்டியலுடன் வந்தனர்.
வீட்டில் ஒரு பெண் தனியாக இருப்பதை அறிந்த அவர்கள், உள்ளே புகுந்து கதவை தாழிட்டனர். குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பீரோ சாவியை கேட்டனர். நான்சி சாவியை கொடுத்ததும், பீரோவில் இருந்த 33 பவுன் நகைகளை கொள்ளையடித்துகொண்டு இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
நடந்த சம்பவம் குறித்து மனோஜூக்கு போனில் தெரிவித்துள்ளார் நான்சி. இதையடுத்து மனோஜ் அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லுார் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையரை தேடி வருகின்றனர்.