திருமங்கலம் ஆசிட் வீச்சு... "காப்பாற்றப்படுகின்றனரா" உண்மையான குற்றவாளிகள்?
மதுரை: மதுரை திருமங்கலத்தில் இரண்டு கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் ஊற்றப்பட்ட வழக்கில் உண்மையான குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் அவர்களைக் காப்பாற்ற பெரிய இடத்திலிருந்து சிலர் முயன்று வருவதாகவும், இதன் முதல் கட்டமாகவே மன நிலை சரியில்லாதவர் என்று கூறி ஒருவரை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர் என்றும் ஒரு தகவல் மதுரையில் பரவி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து மதுரை புறநகர் மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதாரியும் சரிவர விளக்கம் தராமல் இருப்பதால் பிரச்சினை மேலும் பெரிதாவது போலத் தெரிகிறது.
ஆசிட் வீச்சுக்குள்ளாகி படுகாயமடைந்த மாணவிகள் மீனா மற்றும் அங்காள ஈஸ்வரி ஆகிய இருவரும் வாய் திறந்து பேசும்போதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்று தெரிகிறது.
செப்டம்பர் 12ம் தேதி தாக்குதல்
செப்டம்பர் 12ம் தேதி கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மீனா மற்றும் அங்காள ஈஸ்வரி ஆகியோர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஆசிட் வீசி விட்டுச் சென்றனர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.
சரண் அடைய வைக்கப்பட்ட மன நலம் பாதித்தவர்
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த சம்பவத்திற்குக் காரணமானவர் என்று கூறி சங்கரநாராயணன் என்பவரை அவரது தந்தையே போலீஸில் வந்து ஒப்படைத்தார். அவரை கோர்ட்டும், மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பிவைத்து உத்தரவிட்டுள்ளது.
உண்மையா...
ஆனால் உண்மையில் இவர்தான் குற்றவாளியா என்ற சந்தேகத்தை பலரும் கிளப்பி வருகின்றனர். காரணம், உண்மையில் கோவை மற்றும் திருமங்கலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள்தான் ஆசிட் வீசியவர்கள் என்றும் அவர்கள் திட்டவட்டமாக கூறுகிறார்கள். அவர்களைக் காப்பாற்ற முயற்சிகள் நடப்பதாகவும் இவர்கள் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.
லூஸு என்று கிண்டல் செய்ததால்
ஆனால் எஸ்.பி. விஜயேந்திர பிதாரி, சங்கரநாராயணன்தான் குற்றவாளி என்கிறார். மேலும் அவரை போலீஸார்தான் பிடித்துக் கைது செய்ததாகவும் பிதாரி கூறுகிறார். அவர் கூறுகையில், போலீஸ்தான் சங்கரநாராயணனைப் பிடித்தது. அவர்தான் ஆசிட் அடித்தவர். மீனாவும் அங்காள ஈஸ்வரியும் பலமுறை சங்கரநாராயணனை லூஸு என்று கிண்டல் செய்ததால் அவர்களின் மேல் இருந்த வெறுப்பில் ஆசிட் வாங்கி ஊற்றியிருக்கிறார் என்கிறார் பிதாரி.
உள் குத்து இருக்கிறது...
ஆனால் போலீஸ் தரப்பில் சிலர் கூறுகையில், உண்மையான குற்றவாளிகளை மறைக்க காவல் துறையிலேயே சிலர் இப்படி செய்து வருகின்றனர். மனநலம் இல்லாதவருக்கு தண்டனை கிடைக்காது என்பதால் இப்படி அவசரம் காட்டுகின்றனர் என்கின்றனர்.
பதில் சொல்ல முடியாத சங்கரநாராயணனின் தந்தை
இதற்கிடையே, சங்கரநாராயணனின் தந்தை திவாகர் அளித்துள்ள ஒரு பேட்டியில், என் மகனுக்கு அவனின் சித்தி மகள் ராஜலட்சுமி மேல் அதிக பாசம். ஆனால் ராஜலட்சுமி வாழக்கையில் நடந்த சம்பவம் என் மகனை பாதித்து விட்டது. ராஜலட்சுமிக்கு திருமணம் நிச்சயதார்த்தம் செய்திருந்தோம். அப்போது அந்தப் பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது என் மகன் மனதையும் பாதித்தது. ஏதேதோ செய்வான். அடிப்பான். எங்களை துன்புறுத்துவான். தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வான். அடிக்கடி பயங்கர தொந்தரவு செய்ய ஆரம்பித்தான். வீட்டில் பிளேடால் கை, கழுத்து என அறுத்துக்கொள்வான். சில சமயம் பயங்கர சண்டை போடுவான்.
கத்தியால் தாக்க முயன்றான்
கடந்த வருடம் பகத்சிங் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்துள்ளான். கத்தியால் தாக்க வந்ததாக அவன் மீது போலீஸாரால் வழக்கு போட்டது. பிறகு மனநலம் பாதித்ததைக் காட்டி வெளியில் கொண்டு வந்தோம். இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி காலையில்தான் அவன் வீட்டுக்கு வந்தான். அவன் கைகளில் காயம் இருந்தது. என்ன என்று விசாரித்தேன். முதலில் பேச மறுத்தான். அடித்தேன். அப்புறம்தான், நான்தான் அந்த மாணவிகள் மீது ஆசிட் ஊற்றினேன் என்றான். அதனால் நானே போலீஸ் எஸ்.பி-கிட்ட கூட்டிட்டுப்போய் சரண்டர் பண்ணினேன் என்றார். ஆனால் அவரால் பல கேள்விகளுக்கு விளக்கம் தர முடியவில்லை. மெளனத்தையே பதிலாக கொடுத்துள்ளார்.
உண்மை என்னவோ.. மீனா, அங்காள ஈஸ்வரிதான் சொல்ல வேண்டும்.