மாட்டிறைச்சி தடையால் சிவில் யுத்தம் வரும் என எச்சரித்தது நடந்துவிட்டது- திருமாவளவன்
மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையால் நாடுமுழுவதும் வகுப்புவாதிகளின் வன்முறை வெறியாட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.
சென்னை : சென்னை ஐஐடி மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : சென்னை ஐஐடி வளாகத்தில் வகுப்புவாத சக்திகளின் வன்முறை வெறியாட்டம் தலைதூக்கியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் 'ஏபிவிபி' என்னும் மாணவர் அமைப்பினர், சுராஜ் என்னும் மாணவரை மூர்க்கமாகத் தாக்கியதில், அவரது வலது கண் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
'அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்' என்ற அமைப்பைச் சார்ந்தவர் என்பதாலும் மாட்டிறைச்சிக்கு எதிரான மோடி அரசின் நிலைப்பாட்டை எதிர்க்கும் வகையில் மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்தார் என்பதாலும்தான், அவர்மீது இந்தக் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பது தெரியவருகிறது.
அச்சுறுத்தல்
அவ்வாறு தாக்கும்போதே, "உன்னைத் துண்டுதுண்டாக வெட்டிக் கொலைசெய்வோம்" என்றும் ஏபிவிபி அமைப்பினர் அச்சுறுத்தியுள்ளனர். மாணவர்களிடையில் திட்டமிட்டு விதைக்கப்பட்ட வகுப்புவாத வெறி அரசியலே, இத்தகைய கொலைவெறித் தாக்குதலுக்குக் காரணமாகும்.
தலைவிரித்தாடும் வகுப்புவாதம்
இவ்வாறு, நாடு முழுவதும் வகுப்புவாத வெறியர்களின் வன்முறை வெறியாட்டம் மென்மேலும் தலைவிரித்தாட வாய்ப்புள்ளது. மாடுகளை வைத்திருக்கும் யாரையும் 'அவர் இறைச்சிக்காகத்தான் மாடுகளை வைத்திருந்தார்' என்று தாக்குவதற்கு, மிருகவதைத் தடுப்புச் சட்டத்திற்கான தற்போதைய விதிகள் வழிவகுக்கும்.
தூண்டுகோல்
அதாவது, இது மக்களுக்கிடையிலான ஒரு 'சிவில் யுத்தத்துக்கு'த் தூண்டுகோலாக அமையும். இதை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொடக்கத்திலேயே சுட்டிக்காட்டியுள்ளோம்.
கண்டனம்
இதற்கான ஒரு சான்றாகவே, சென்னை ஐஐடி மாணவர் மீதான தாக்குதல் அமைந்துள்ளது. காட்டுமிராண்டித்தனமான இந்தப் போக்கை, விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.