மகாராஷ்டிராவை பாரதம் என சொல்ல பாஜகவுக்கு தைரியம் உண்டா?.. விசிக திருமாவளவன் கேள்வி
நெல்லை: மகாராஷ்டிராவிற்கு சென்று பாரதம் என சொல்ல பாஜகவினருக்கு தைரியம் இருக்கிறதா என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் நடந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை கவுரவிக்கும் விதமாக ஆளுநர் மாளிகைக்கு அழைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டி பேசினார்.
அப்போது அவர் தமிழ்நாடு தேசத்தின் அங்கம் அல்ல. தேசத்தின் ஒருங்கிணைந்த பகுதி என சொல்லி வருகிறார்கள். நாடு தழுவிய அளவில் எந்த ஒரு விஷயத்தை முன்னெடுத்தாலும் அதற்கு தமிழ்நாடு மட்டும் மறுப்பு தெரிவிப்பது வாடிக்கையாகிவிட்டது.
தமிழகம் Vs தமிழ்நாடு: பரபரப்புக்கு மத்தியில் ஆளுநர் உரையுடன் இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டசபை
தவறான கதைகள்
இதற்கு நிறைய தவறான, மோசமான கட்டுக் கதைகளை உருவாக்கியுள்ளனர். இவற்றை உடைக்க வேண்டும். தமிழ்நாடு என்பது நமது நாட்டின் ஆன்மா, அடையாளம். குறிப்பாக தமிழ்நாடு என சொல்வதை விட தமிழகம் என சொல்வதுதான் சரியாக இருக்கும் என ஆளுநர் பேசியிருந்தார்.
தமிழ்நாடு அல்ல
இதில் தமிழ்நாட்டை தமிழ்நாடு என சொல்வது சரியாக இருக்கும் என பேசியதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் தற்போது ட்விட்டரில் சுருக்கமாக சொல்ல தமிழகம் என எழுதி கொண்டிருந்தவர்களும் தமிழ்நாடு என்றே எழுதி வருகிறார்கள். மேலும் ஆந்திரபிரதேசத்தில் வரும் பிரதேசம் என்றாலும் மகாராஷ்டிரத்தில் வரும் ராஷ்ட்ரா என்றாலும் நாடு என்ற பொருள் தானே, அந்த மாநிலங்களின் பெயர்களை மாற்றி அழைக்க முடியுமா என கேள்வி எழுப்பப்பட்டது.
டிவிட்டரில் டிரென்ட்
இந்த நிலையில் தமிழ்நாடு என்ற சொல் ட்விட்டரிலும் டிரென்டாகி வருகிறது. தமிழகத்தில் பாஜகவை தவிர மற்ற கட்சிகள் அனைத்துமே ஆளுநரின் பேச்சுக்கு எதிர்கருத்துகளைத்தான் கூறி வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து நெல்லையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில் தமிழ்நாடு, தமிழகம் என்பதற்கு எந்த வேறுபாடும் இல்லை.
தாய் அம்மா
தாய் என்றாலும் அம்மா என்றாலும் ஒரே பொருள்தான் உள்ளது. தமிழகம், தமிழ்நாடு என்பது சொல் விளையாட்டு அல்ல. இதில் சூசகமும் அரசியலும் சூழ்ச்சியும் உள்ளது. பிரதேசம் என்றாலும் ராஷ்டிரியம் என்றாலும் நாடு என்பதுதானே பொருள். இந்த தேசத்திற்கு இந்து ராஷ்ட்ரா என பெயர் சூட்ட நினைக்கிறார்கள்.
மகாராஷ்டிராவில் பாரதம்
மகாராஷ்டிராவிற்கு சென்று பாரதம் என்றுதான் கூறவேண்டும் என்று சொல்ல இவர்களுக்கு துணிச்சல் உண்டா? ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்.எஸ்.எஸ். தொண்டராகி அந்த பணிகளை செய்யலாம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்பியுமான தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கண்டனம்
அது போல் சீமான், பிரேமலதா, முத்தரசன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும் மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்வதால் என்ன கிடைத்து விட போகிறது என மத்திய அரசு கேட்ட போது அதற்கு அறிஞர் அண்ணா என்ன பதில் அளித்தார் என்பது குறித்து வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு கூறுகையில் தமிழ்நாட்டை தமிழகம் என கூறினால் என்ன தவறு, இடத்திற்கு ஏற்ப பெயரை மாற்றி கூறலாம் என சமத்துவப் பொங்கல் விழாவில் குறிப்பிட்டுள்ளார்.