காட்டுமன்னார் கோவில் தொகுதியில் மறு தேர்தல் நடத்தக்கோரி திருமாவளவன் வழக்கு
சென்னை: காட்டுமன்னார் கோவில் சட்டசபை தொகுதியில் மறு தேர்தல் நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் சட்டசபை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் முருகுமாறன் போட்டியிட்டார்.
தேர்தல் முடிவின் போது, திருமாவளவன் 48,363 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் 48,450 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார் திருமாவளவன்.
இதையடுத்து முருகுமாறன் வெற்றிப் பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் தேர்தல் வழக்கை இன்று தாக்கல் செய்தார். அதில்,‘ஆளும் கட்சியை சேர்ந்த முருகுமாறனுக்கு, அரசு அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது. அதனால், முருகுமாறன் முறைகேடாக இந்த தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளார்.
எனவே, அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். மேலும், காட்டுமன்னார் கோவில் தொகுதியில் மறுதேர்தல் நடத்தவும் அதில் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.