விஜயகாந்த்துடன் திருமா. சந்திப்பு... இன்று இரவு வைகோவைப் பார்க்கிறார்
சென்னை: தலைவர்கள் நகர் வலம் வரிசையில் தற்போது விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஒவ்வொரு தலைவராக சந்தித்து வருகிறார். அந்த வரிசையில் இன்று தேமுதிக தலைவரான விஜயகாந்த்தைச் சந்தித்துப் பேசினார்.
முதலில் விஜயகாந்த்தான் இந்த தலைவர்கள் சந்திப்பு படலத்தை ஆரம்பித்து வைத்தார். திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோரை நேரில் போய்ச் சந்தித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்துப் பேசி விட்டு வந்தார்.
அவரைத் தொடர்ந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது தம்பி மகன் திருமண அழைப்பைக் கொடுக்க ஒவ்வொரு தலைவராக சந்தித்துப் பேசினார்.

அடுத்து புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் தலைவர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார். அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனும் தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை சந்தித்த அவர் கூட்டணி ஆட்சி குறித்துப் பேசினார். இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்துப் பேசினார் அவர். காலை 11 மணிக்கு தொடங்கிய சந்திப்பு 12 மணி வரை நீடித்தது. இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வருகிற ஜூன் 9ந் தேதி தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் ஒரு கருத்தரங்கை நடத்துகிறது. அந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக விஜயகாந்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தேன். அவர் நாளை தனது பதிலை தெரிவிப்பதாக கூறினார்.
இனிவரும் காலங்களில் கூட்டணி ஆட்சி முறைதான் வரவேண்டும். ஒரு கட்சியில் ஒரு எம்.எல்.ஏ. இருந்தால்கூட அவருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்க வேண்டும். உத்தரபிரதேசம் இதற்கு முன்மாதிரியாக திகழ்கிறது.
மத்திய அரசில் 40 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சியே நடந்து வருகிறது. ஜனதா கூட்டணி, தேசிய முன்னணி கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி முறையே தொடர்ந்து வருகிறது.
கடந்த மாதம் விஜயகாந்த் தலைமையில் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தோம். ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி அவரிடம் அப்போது தெரிவித்தோம். அதுகுறித்து மத்திய அரசு ஏதும் தெரிவித்துள்ளதா என்று விஜயகாந்திடம் கேட்டேன்.
ஐ.ஐ.டி. மாணவர் பிரச்சனை குறித்து விவாதித்தோம். வாக்கு வங்கிக்கு மட்டும் கூட்டணி சேராமல் கூட்டணி ஆட்சியிலே பங்கு வேண்டும் என்பது குறித்து அவரிடம் வலுசேர்த்து பேசினேன். இதுபற்றி 2 கம்யூனிஸ்ட் தலைவர்களிடமும் பேசியுள்ளேன். அவர்கள் கருத்தரங்குக்கு வருவதாக கூறியுள்ளார்கள்.
இன்று இரவு 7 மணிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்திக்க இருக்கிறேன். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்திக்கும் எண்ணம் இல்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications