சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!
சென்னை: பொறியாளர் சுவாதி படுகொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடிய தலித் இயக்கத் தலைவர்களின் முன்னோடி 'தாத்தா' ரெட்டைமலை சீனிவாசன். ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக போற்றப்படுகிற ரெட்டைமலை சீனிவாசன் 1859-ம் ஆண்டு ஜூலை 7-ந் தேதி பிறந்தார்.

பறையர் மகாஜன சபையை தோற்றுவித்த 'பறையன்' என்ற வார இதழை நடத்தியவர் வழக்கறிஞர் ரெட்டைமலை சீனிவாசன்.. தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தியடிகளுக்கு சட்டரீதியான மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியதுடன் தமிழையும் கற்றுக் கொடுத்தவர் 'திவான் பஹதூர்' ரெட்டைமலை சீனிவாசனார்தான்.
சென்னையில் ரெட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாள் விழா இன்று பல்வேறு இயக்கங்களின் சார்பில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. சென்னை ஓட்டேரியில் உள்ள ரெட்டைமலை சீனிவாசன் நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் ஒரு சிறுவன் கஞ்சா சாக்லெட் சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். கஞ்சா சாக்லெட் விற்பனையை போலீசார் தீவிரமாக கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. ஆகையால் தமிழக போலீசார் விசாரிக்க கூடாது.
சுவாதி கொலையின் பின்னணியில் உள்ள மர்மங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டுமானால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.
பாதிக்கப்பட்ட சுவாதியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். சுவாதியின் சகோதரிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாளில் அரசு விருதுகள் வழங்கி கொண்டாட வேண்டும்.
இவ்வாறு தொல். திருமாவளவன் கூறினார்.












Click it and Unblock the Notifications