பாஜகவும், காங்கிரஸும் வெறும் பேச்சு மட்டும் தான், செயலில் ஒன்னும் கிடையாது: திருமாவளவன்
சென்னை: பாஜகவும் சரி, காங்கிரஸும் சரி அதிகமாக பேசுவார்களே தவிர செயலில் எதுவும் இருக்காது. ஏனென்றால் எதுவாக இருந்தாலும் டெல்லியில் இருக்கும் கட்சி தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.ஏழுமலையை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில்,

கூட்டணி ஆட்சி
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். அப்படி செய்தால் தான் ஒரு கட்சி ஆட்சி மாறி கூட்டணி ஆட்சி அமையும். இதுவே எங்கள் கூட்டணியின் லட்சியம் ஆகும்.

மதுவிலக்கு
கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்தில் ஊழலை அழிக்க முடியும். மதுவிலக்கை அமல்படுத்த முடியும். மது ஆலைகளை நடத்தி வரும் திமுக, அதிமுகவால் மதுவிலக்கை நிச்சயம் கொண்டு வர முடியாது. படிப்படியாக மது விலக்கை அமல்படுத்துவதாக அதிமுக கூறுவது ஏமாற்று வேலை ஆகும்.

ஊழல்
மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும் என்று நாங்கள் அறிவித்தோம். அதை பார்த்து தான் திமுகவும், அதிமுகவும் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

பேச்சு தான்
பாஜகவும் சரி, காங்கிரஸும் சரி அதிகமாக பேசுவார்களே தவிர செயலில் எதுவும் இருக்காது. ஏனென்றால் எதுவாக இருந்தாலும் டெல்லியில் இருக்கும் கட்சி தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களாக எதுவும் செய்ய முடியாது.












Click it and Unblock the Notifications