ஜெ. அறிவித்த 13 அம்ச திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
ஜெயலலிதா வழியில் ஆட்சி செய்வதாக சொல்லிக் கொள்பவர்கள் அவர் அறிவித்த 13 அம்ச தி்ட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: பெண்களின் பாதுகாப்பிற்கென மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த 13 அம்ச திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகையே அதிரவைத்த நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்திருக்கிறது.

கொள்கை அளவில் மரண தண்டனையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறது என்கிற போதிலும் இந்த வழக்கின் கொலை செய்யப்பட்ட நிர்பயாவின் பெற்றோர்களது உணர்வுகளை மதித்து அவர்களுடைய எண்ணத்தை விடுதலைச் சிறுத்தைகளும் அங்கீகரிக்கிறது.
நிர்பயா வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தண்டனை நாடெங்கும் பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்கொடுமைகளை குறைப்பதற்கு உதவவேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். நீதிபதி வர்மா ஆணையத்தின் பரிந்துரைகளை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு முன்வரவேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் மகளிருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துகொண்டே வருகின்றன. தலைநகர் தில்லி என்பது 'கற்பழிப்புகளின் தலைநகர்' என்று வர்ணிக்கப்படும் அளவிற்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அங்கே அதிகரித்து வருகின்றன. நிர்பயா வழக்கையொட்டி எழுந்த கொந்தளிப்பு பெண்களுடைய பாதுகாப்பாகமாற தவறிவிட்டது என்பதையே இது காட்டுகிறது.
உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் அளித்திருக்கும் தீர்ப்பும், அதிலும் குறிப்பாக, நீதிபதி பானுமதி கூறியுள்ள கருத்துகளும் ஆட்சியாளர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே இருக்கின்ற பொறுப்புகளை சுட்டிக்காட்டியுள்ளன. நாட்டின் மக்கள் தொகையின் சமபகுதியினராக இருக்கின்ற பெண்கள் முன்னேறுவதற்கு வழிவிடவில்லை என்றால் நாடும் முன்னேறமுடியாது.
நிர்பயா சம்பவத்தைத் தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பிற்கென மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 13 அம்ச திட்டம் ஒன்றை அறிவித்தார். அவரது வழியில் ஆட்சி செய்வதாக சொல்லிக் கொள்பவர்கள் அந்த திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
மரண தண்டனை வழங்குவதில் உச்சநீதிமன்றம் சில வரையறை வகுத்துள்ளது. ஆனால், அந்த வரையறைகள் அவ்வப்போது உச்சநீதிமன்றத்தாலேயே மீறப்படுவதைப் பார்க்கிறோம். இந்த வழக்கிலும் அத்தகைய விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications